தமிழகத்தின் 12-வது முதலமைச்சராகப் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்ட ஜோசப் விஜய், தனது அசாத்திய நேர மேலாண்மை மற்றும் எளிமையான பணி முறையால் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பதவியேற்றது முதல் தற்போது வரை அனைத்து நிகழ்வுகளுக்கும் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்ட நேரத்திற்கு மிகவும் முன்னதாகவே வருகை தந்து அசத்தி வருகிறார்:
காலை 10 மணிக்கு விழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காலை 8.48 மணிக்கே முதலமைச்சர் வருகை தந்தார். காலை 9.30 மணி நிகழ்வுக்கு, காலை 8.45 மணிக்கே தலைமைச் செயலகம் வந்தடைந்தார். காலை 9.30 மணிக்குத் தேர்தல் தொடங்கிய நிலையில், 8.55 மணிக்கே சட்டமன்ற அவைக்குள் நுழைந்தார்.
காலை 9.30 மணிக்கு நடைபெற்ற இந்த முக்கிய வாக்கெடுப்பில் பங்கேற்க காலை 9 மணிக்கே கோட்டைக்கு வந்தார். 3 நாட்கள் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று முதல் தனது வழக்கமான கோப்புப் பணிகளை முதலமைச்சர் விஜய் கவனித்து வருகிறார். நேற்று காலை ஒரு அரசு ஊழியரைப் போலச் சரியாக 9.55 மணிக்குத் தலைமைச் செயலகம் வந்த அவர், மாலை 4 மணி வரை தொடர்ந்து அதிகாரிகளுடன் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார்.
முதலமைச்சரின் இந்த அலுவலக வருகையில் மற்றொரு சுவாரசியமான விஷயமாக, அவர் தனது மதிய உணவைக் காலையிலேயே வீட்டிலிருந்து கையோடு கொண்டு வந்திருந்தார். மதிய உணவு இடைவேளையின் போது வெளியிலோ அல்லது வீட்டிற்கோ செல்லாமல், தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையிலேயே அந்த உணவைச் சாப்பிட்டுவிட்டுத் தொடர்ந்து பணிகளைக் கவனித்தார். பின்னர் மாலை 4 மணிக்குத் தனது அன்றைய பணிகளை முடித்துக் கொண்டு இல்லம் திரும்பினார்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தாலும், எந்தவித பந்தாவும் இன்றி மிகச் சரியான நேரத்திற்கு அலுவலகம் வந்து, மதிய உணவையும் கையோடு கொண்டு வந்து பணிபுரியும் அவரது இந்த ‘டிசிப்ளின்’ (Discipline) தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீசார் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.