அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவருமான கே.வி.ராமலிங்கம் தவெக-வில் இணைந்துள்ளார். அதிமுகவின் முக்கிய நிர்வாகியாகச் செயல்பட்டு வந்த கே.வி.ராமலிங்கம், ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். சமீபத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS), கே.வி.ராமலிங்கத்தின் மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்தார். இதனால் அதிருப்தியில் இருந்த அவர், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட கே.வி.ராமலிங்கத்தின் இந்த முடிவு, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பினரை எடப்பாடி பழனிசாமி ஒட்டுமொத்தமாக நீக்கியுள்ளார். இந்த நடவடிக்கையானது அதிமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமைக்கும் மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த விரிசல், அடுத்தடுத்து பல முக்கிய விக்கெட்டுகள் சரிவதற்கு வழிவகுக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.