கனடாவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர், இந்தியர்களைப் பாராட்டி வெளியிட்ட வீடியோ இணையத்தில் குடியேற்றம், சமூகக் தப்பெண்ணங்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் குறித்த காரசாரமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது. டைசன் ஹாக்லி என்ற அந்த இளைஞர், ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது தனது அறைக்கான சாவி கார்டை சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் தவித்துள்ளார்.
அப்போது அங்கு வந்த இந்தியர் ஒருவர் அவருக்கு உதவி செய்து அறைக்குள் செல்ல வைத்துள்ளார். இதனால் நெகிழ்ந்த அந்த இளைஞர், “இந்தியர்கள் நல்லவர்கள், புத்திசாலிகள் என்று நான் கூறும்போது பலரும் என் மீது கோபப்படுகிறார்கள்; ஆனால் எல்லா சமூகத்திலும் நல்லவர்கள் இருக்கிறார்கள்.
எனக்கு ஒரு இந்தியர் தான் உதவினார்; அதனால்தான் கனடாவிற்கு இன்னும் அதிகமான இந்தியர்கள் தேவை என்று நான் கூறுகிறேன்” என அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் தங்களின் மாறுபட்ட கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
சிலர் அந்த இளைஞரின் கருத்தை ஆதரித்து, தங்களுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் இந்தியர்களின் நேர்மை மற்றும் உதவி குணம் குறித்த நல்ல அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். ஆனால், மறுபுறம் பலர் இந்தத் தர்க்கத்தை விமர்சித்துள்ளனர்.
“ஒரு சாதாரண கதவைத் திறக்க உதவியதற்காக உங்களைக் காப்பாற்றிவிட்டதாகக் கூறுவதா? அவர் அந்த ஹோட்டல் ஊழியராகவோ அல்லது உரிமையாளராகவோ தான் இருந்திருப்பார்” என்றும், “உங்களுக்கு ஒரு வெள்ளைக்காரர் கூட உதவியிருக்கலாம்; இந்தச் சம்பவத்திற்கும் குடியேற்றத்திற்கும் என்ன சம்பந்தம்?” என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“>
ஒரு தனிப்பட்ட சாதாரண உதவியை வைத்து முழு குடியேற்றக் கொள்கையையோ அல்லது ஒட்டுமொத்த சமூகத்தையோ மதிப்பிடக் கூடாது என்று பலரும் விவாதித்து வருகின்றனர்.