பட்டப்பகலில்.. திட்டமிட்டு காரால் அடித்து தூக்கப்பட்ட வக்கீல் படுகொலை - நெஞ்சை உலுக்கும் வீடியோ
குலசேகரன் முனிரத்தினம் May 24, 2026 03:44 PM

Watch Video: ஐதராபாத்தில் வக்பு அமைப்பின் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக போராடி வந்த வழக்கறிஞர் காஸா மொய்சுதின் என்பவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வழக்கறிஞர் படுகொலை

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வக்பு அமைப்பின் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த, 63 வயதான காஸா மொய்சுதின் என்பவர் வீட்டு வாசலிலேயே காரை கொண்டு இடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாந்தி நகர் பகுதியில் உள்ள தனது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தனது காரில் முயன்றபோது, அவ்வழியாக வந்த ஸ்கார்ப்பியோ ஒன்று திடீரென வழியை மாற்றி வழக்கறிஞர் மீது அதிவேகமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காரை கொண்டு இடித்த வீடியோ..

வெளியாகியுள்ள தகவலின்படி, மொய்சுதீன் அதிகாலை 5.30 மணியளவில் நீச்சல் பயிற்சிக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் தனது காரில் ஏற இருத்த நிலையில், ​​பச்சை நிற ஸ்கார்பியோ எஸ்யூவி வாகனம் ஒன்று அதிவேகமாகப் பின்னால் இருந்து வந்து அவர் மீது மோதியது. இதில் சுமார் 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 

குடும்பத்தினர் குற்றச்சாட்டு

மொய்சுதீனின் மகன் முகமது ஃபர்ஹான், ஐதராபாத்தைச் சேர்ந்த இரண்டு கல்வியாளர்களே இந்தக் கொலைக்குப் பின்னால் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், “என் தந்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக வழக்குகளை நடத்தி வருகிறார். நகரத்தில் உள்ள மூன்று வக்ஃபு கல்வி நிறுவனங்களின் சொத்துக்கள் தனியார் அறக்கட்டளைகள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இந்தப் பொதுச் சொத்துக்களைத் தனியார்மயமாக்குவதை என் தந்தை எதிர்த்ததுடன், அவை பொது நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மிரட்டல்கள் மட்டுமின்றி அவர் மீது ஏற்கனவே சுமார் 5 முறை கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 
 இடைத்தரகர்கள் மூலம், வழக்குகளைத் திரும்பப் பெறுமாறும், பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியேறுமாறும் அவருக்கு மீண்டும் மீண்டும் செய்திகள் அனுப்பப்பட்டன” என குற்றம்சாட்டியுள்ளார்.

காவல்துறை விசாரணை:

குற்றவாளிகளை கைது செய்வதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் மற்றும் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு கடும் கண்டம் தெரிவித்துள்ள வழக்கறிஞர் சங்கம், மொய்சுதினீன் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: Hero Vida VX2: நாட்டின் மலிவான ஸ்மார்ட் மின்சார ஸ்கூட்டர் - 70KM டாப் ஸ்பீட், டிஜிட்டல் அம்சங்கள் - முழு விவரம்

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.