ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கல்யாண்புரா பகுதியைச் சேர்ந்த அனு மீனா என்ற பெண், தனது கணவரின் தொடர் வரதட்சணை கொடுமை மற்றும் அராஜகத்தால் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் விபரீதம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பொதுப்பணித்துறையில் (PWD) உயர் அதிகாரியாகப் பணியாற்றி வரும் கணவர் கௌதம் மீனா, தினமும் குடித்துவிட்டு வந்து அனுவை மிருகத்தனமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.
ஒருகட்டத்தில் வீட்டின் கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு மனைவியைக் கொல்லவும் அவர் முயன்றதால் பயந்துபோன அனு, தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பின்னர் குடும்பத்தினர் சமாதானம் பேசி சேர்த்து வைத்த நிலையிலும், கணவரின் சித்திரவதை ஓயாததால் மன உளைச்சல் தாங்காமல் தற்கொலைக்கு முன்பாக தனது கணவருக்கு வீடியோ கால் செய்து, உறவினர்களுக்கும் மெசேஜ் அனுப்பிவிட்டு அனு விபரீத முடிவை எடுத்துள்ளார்.
அனு இறந்த சில நாட்களுக்குப் பிறகு அவரது 10 வயது மகன், தாயின் மொபைல் போனை அன்லாக் செய்து பார்த்தபோதுதான் ஒட்டுமொத்தக் கொடூரமும் அம்பலமாகியுள்ளது. அதில் கௌதம் மீனாவே தனது மனைவியை ஆபாசமாகத் திட்டி, அடித்துத் துன்புறுத்தியதை வீடியோவாகப் பதிவு செய்து வைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் ஒரு சிசிடிவி காட்சியில், பெற்ற மகன் கண்முன்னே மனைவியை கௌதம் மீனா செருப்பால் அடித்து, கீழே தள்ளி, அவர் முகத்தில் காறித்துப்பும் கொடூரக் காட்சிகள் பதிவாகியுள்ளது பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது.
“அப்பா எப்போதுமே அம்மாவை இப்படித்தான் கொடூரமாக அடிப்பார்” என்று அந்த தம்பதியின் 10 வயது மகனும், 8 வயது மகளும் உறவினர்களிடம் அழுதுகொண்டே வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இந்த ஆதாரங்கள் அனைத்தையும் கைப்பற்றியுள்ள ஜெய்ப்பூர் போலீசார், தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் வரதட்சணைக் கொடுமைப் பிரிவுகளின் கீழ் அந்த அரசு இன்ஜினியர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.