கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது சக காவல்துறை அதிகாரிகளுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தார் மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி என்ற விமர்சனங்கள் எழுந்து, அவருக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. முக்கியமான அதுவும் சென்சிட்டிவான வழக்கு தொடர்பான இடத்தில் இப்படி வாய்விட்டு சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தது சரியான நடவடிக்கை இல்லையென்றாலும், இந்த வழக்கில் மிகத் தீவிரமாக செயல்பட்டு, 10 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறார் அதே ரம்யா பாரதி ஐ.பி.எஸ்.
மிக விரைவாக குற்றவாளிகளை கைது செய்ததற்கு பாராட்டு பத்திரம் வாங்கியிருக்க வேண்டிய ரம்யா பாரதி ஐபிஎஸ், ஒரே ஒரு செய்கையால் இன்று கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.
அதுவும் செய்தியாளர் சந்திப்பு தொடங்குவதற்கு முன்னர் தனிப்பட்ட முறையில் காவல் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்த காட்சிகள் ரெக்கார்ட் செய்யப்பட்டதன் விளைவே இப்படியான ஒரு நிலைக்கு ரம்யா பாரதி தள்ளப்பட்டிருக்கிறார். ஆனால், இந்த வழக்கில் மிகத் தீவிரமாக செயல்பட்டு, குற்றவாளியை கைது செய்ய மெனக்கிட்டவர் ரம்யா பாரதி. இவரின் இந்த தீவிரத்தால்தான் குற்றவாளிகளை சில மணி நேரங்களிலேயே பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
யார் இந்த ரம்யா பாரதி ஐபிஎஸ் ?
2008ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ஜை சேர்ந்த ரம்யா பாரதி, தன்னுடைய 21வது வயதிலேயே UPSC என்ற மத்திய தேர்வாணயத்தின் தேர்வை எழுதி அதில் வெற்றி பெற்று ஐபிஎஸ் என்ற போலீஸ் பணியை தேர்வு செய்தவர். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை இளங்கலை சமூகவியல் துறையை தேர்வு செய்து படித்தவர் இவர். கல்லூரி படிக்கும்போதே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதலில் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் அளவுக்கு கூட தொடர்ந்து படித்தவர் ரம்யா பாரதி. அதன் விளைவாக தன்னுடைய முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வென்று தன்னுடைய 21வயது வயதிலேயே ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானவர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்க எந்த பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியிலேயே படித்து வெற்றி பெற்றவர் ரம்யா பாரதி என்பதுதான். இன்று சிவில் சர்வீஸ் தேர்வு எழுத நினைக்கும் ஏராளமான பெண்களுக்கு முன் மாதிரியாகவும் அதே நேரத்தில் பலருக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிப்பவருமான ரம்யா பாரதி இருக்கிறார்.
சமூகம் மீதான அக்கறை
20, 21 வயதில் மற்ற பெண்கள் மாதிரி மகிழ்ச்சியாக இருப்பதை விடுத்தும், தனக்கு பிடித்த பல விஷயங்களை விட்டுக்கொடுத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்து வெற்றி பெற்றவர் ரம்யா. அதற்கு காரணம். தன்னுடைய தந்தை, தாய் போலவே அரசு பதவியில் அமர்ந்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் என்று ரம்யா பாரதியே சொல்லியிருக்கிறார்.
பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
ஐபிஎஸ் தேர்வாகி தமிழ்நாட்டு கேடராகவே போஸ்டிங் கிடைத்ததும் ஒரு பெண்ணாக அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழி, பெண்களின் குழந்தைகளின் பாதுகாப்பை தன்னால் முடிந்த அளவு உறுதிசெய்வதுதான். தொடக்கத்தில் அவர் பணியாற்றிய ஓசூர், கோவை மாவட்டங்களில் எல்லாம் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை காவல்நிலையம் வந்து சொல்ல தயங்கிய நிலையில் அவர்களது இடத்திற்கே சென்று விசாரித்து அவர்களுக்கான நீதியை பெற்றுத் தந்தவர் ரம்யா பாரதி.
வட சென்னையின் இணை ஆணையராக ரம்யா
வட சென்னை என்றாலே அதிக குற்றங்கள் நடைபெறும் இடம், குற்றவாளிகளின் புகழிடமாக திகழும் நகரம் என்ற கற்பிதங்களையெல்லாம் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ரம்யா பாரதி. வட சென்னையின் இணை ஆணையராக அவர் பொறுப்பேற்றதும் இரவில் சைக்கிள் எடுத்துக்கொண்டு தெரு, தெருவாக, ரோட், ரோடாக சென்று பாதுகாப்பை உறுதி செய்தார். ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரியாக அவர் இரவில் தனியாக ரோந்து சென்றது, வட சென்னையை சேர்ந்த பல பெண்களுக்கு தங்களுடைய பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை பெற வைத்தது. அதே நேரத்தில் வட சென்னை குறித்த பார்வையும் பொதுமக்கள் மத்தியில் மாறத் தொடங்கியது.
மேற்கு மண்டல் ஐ.ஜியாக ரம்யா பாரதி
பின்னர் அவர் மேற்கு மண்டல ஐ.ஜியாக பணியமர்த்தப்பட்டது முதல் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக, நேரடியாக ஐ.ஜி அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு பிரச்னைகளை தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்தார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக கோவை மண்டலத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்து வாரம்ந்தோறும் ஆய்வு கூட்டம் நடத்தி அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
சிரித்தால் சிக்கல் ?
இந்நிலையில்தான், சூலூர் சிறுமி வழக்கிலும் துரிதமாக செயல்பட்டு, போலீசாருக்கு அறிவுறுத்தல் வழங்கி 10 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட கோவை மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதியே காரணமாக இருந்தார். ஆனால், செய்தியாளர்கள் யாரும் இல்லாதபோது, லைவ் ரெக்கார்ட் ஆன் செய்யப்பட்ட கேமரா முன்னாள், தனிப்பட்ட முறையில் அதிகாரிகளுடன் அவர் சிரித்துக்கொண்டு பேசியது அவருக்கு எதிராக மாறியிருக்கிறது.