“தமிழ்நாட்டில் முதல்முறையாகப் பதவியேற்கும்போது பேரறிஞர் அண்ணாவும் சரி, கலைஞர் கருணாநிதியும் சரி… ஆட்சிப் பொறுப்புக்கு புதியவர்கள் தான்; எனவே புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தவெக அரசுக்கு 6 மாதம் அவகாசம் கொடுத்து திமுக தலைவர்கள் சும்மா இருக்க வேண்டும்” என்று கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் அதிரடியாக அறிவுறுத்தியுள்ளார். தினசரி மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்ட்களே கடந்த 15 நாட்களாக அமைதி காப்பதாகக் குறிப்பிட்ட அவர், புதிய அரசுக்குச் சலுகை காலம் வழங்க வேண்டியதன் அவசியத்தை ஓப்பனாகப் பேசியுள்ளார்.
மேலும், தொகுதிக்கு நல்லது செய்தால் மட்டுமே தேர்தலில் ஜெயிக்க முடியும் என்பதை மறுத்த அவர், அதற்கு மு.க.ஸ்டாலினின் தோல்வியையே ஒரு மிகப்பெரிய உதாரணமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். “கொளத்தூர் தொகுதிக்குப் பார்த்துப் பார்த்துப் பல நன்மைகளைச் செய்தவர் ஸ்டாலின், ஆனால் மக்கள் நினைத்தால் எவ்வளவு செய்திருந்தாலும் தூக்கி எறிந்து விடுவார்கள்” என்று பெ.சண்முகம் பேசியிருப்பது, தேர்தல் தோல்விக்குப் பின் தவித்து வரும் திமுக மற்றும் தற்போதைய தவெக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.