நடப்பு ஆண்டின் ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சாம்பியன் பட்டத்திற்காக நேரடியாகப் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
View this post on InstagramA post shared by Vtrakit Cricket (@vtrakit.official)
அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, பெங்களூரு அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணியில் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே அதிகபட்சமாக 50 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணி தரப்பில் ராசிக் சலாம் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி சிறப்பான தொடக்கம் தந்தார். ஆரம்பம் முதலே பொறுப்புடன் விளையாடிய அவர் 42 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி, தொடர்ச்சியாக 2வது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றது.