இவங்க முடிக்க விட மாட்டாங்க போலயே.! “அமெரிக்கா-ஈரான் டீல் எங்கள கட்டுப்படுத்தாது“ - இஸ்ரேல் அறிவிப்பு
ஸ்ரீராம் ஆராவமுதன் June 15, 2026 10:44 PM

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான அமைதி ஒப்பந்தத்தை இந்தியா உட்பட பெரும்பாலான சர்வதேச நாடுகள் வரவேற்றுள்ளன. இது, மேற்கு ஆசியாவில் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்றும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்றும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த முடிவால் இஸ்ரேல் கொஞ்சம் கூட மகிழ்ச்சியடையவில்லை என்று தெரிகிறது.

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்தை நிராகரித்த இஸ்ரேல்

புதிய அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம் குறித்த பிரச்னையையும், கவலைகளையும் பல இஸ்ரேலியத் தலைவர்கள் எழுப்பியுள்ளனர். மேலும், தாங்கள் அமெரிக்காவின் பாதையை பின்பற்ற கடமைப்பட்டவர்கள் அல்ல என்றும் கூறியுள்ளனர். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக ஒரு கூட்டு ராணுவ நடவடிக்கையை தொடங்கியதைத் தொடர்ந்து, பிப்ரவரி 28-ம் தேதி அன்று மேற்கு ஆசியாவில் போர் வெடித்தது.

அதைத் தொடர்ந்த, அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதான ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளையும் தாக்கியது. இந்த போர், பிராந்தியம் முழுவதும் விரிவடைந்தது. இஸ்ரேலுக்கும் ஹெஸ்புல்லாவுக்கும் இடையேயான சண்டையும் தீவிரமடைந்து, லெபனான் வரை பரவி, மோதலை மேலும் விரிவுபடுத்தியது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இஸ்ரேலிய தலைவர்கள் அந்த ஒப்பந்தம் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பில் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த தங்கள் கவலைகளை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

“ட்ரம்பின் ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது“

வாஷிங்டனுக்கும் டெஹ்ரானுக்கும் இடையில் எட்டப்படும் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் இஸ்ரேல் கட்டுப்படாது என்றும், நாட்டின் பாதுகாப்பு முடிவுகள் இறையாண்மைக்குட்பட்டதாகவே இருக்கும் என்றும் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் அறிவித்துள்ளார்.

"ட்ரம்பின் ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது. இஸ்ரேல் அமெரிக்காவிற்கு கட்டுப்பட்டதல்ல, நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட தேசம்," என்று கூறிய பென்-க்விர், இஸ்ரேலின் முதன்மைப் பொறுப்பு அதன் குடிமக்களுக்கும் தேசியப் பாதுகாப்பிற்குமே என்று கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி நெதன்யாகுவை குறிவைக்கிறது

இந்த விமர்சனம் ஆளும் கூட்டணியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லாபிட், ஒரு சாத்தியமான ஒப்பந்தம் குறித்த செய்திகளை ஒரு பெரும் ராஜதந்திர மற்றும் பாதுகாப்பு பின்னடைவு என்று கூறி, அதற்கான முழுப் பொறுப்பையும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது சுமத்தினார்.

ஈரான் மீதான வாஷிங்டனின் அணுகுமுறையில் நெதன்யாகுவின் அரசாங்கம் திறம்பட செல்வாக்கு செலுத்தத் தவறியதாகவும், மோதலின் போது முக்கிய மூலோபாயப் பிரச்னைகளை தவறாகக் கையாண்டதாகவும் லாபிட் வாதிட்டார்.

நெதன்யாகு மீது அதிகரித்து வரும் விமர்சனங்கள்

அரசியல் விமர்சகர் கெயில் தல்ஷர் , வரவிருக்கும் இஸ்ரேலிய தேர்தல்களுக்கு முன்னதாக, வாஷிங்டனிடமிருந்து தனது சுதந்திரத்தை வெளிப்படுத்தவும், தனது வலதுசாரி ஆதரவுத் தளத்தினரிடையே ஆதரவை வலுப்படுத்தவும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று பெய்ரூட் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார் என்று கூறியுள்ளார்.

இருப்பினும், இந்த நடவடிக்கை இறுதியில் எதிர்விளைவை ஏற்படுத்தி, நெதன்யாகுவை அரசியல் ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் மேலும் தனிமைப்படுத்தியது என்று தல்ஷீர் தெரிவித்துள்ளார்.

 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.