இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஹபீபி திரைப்பட ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றிவிழாவில் கலந்துகொண்ட இயக்குநர் லெனின் பாரதி சூர்யாவின் கருப்பு திரைப்படம் குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கருப்பு திரைப்படம் ரசிகர்களிடம் இந்து மதம் குறித்த மூட நம்பிக்கையை ஊக்குவிப்பதாக லெனின் பாரதி பேசியுள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஹபீபி படத்தின் வெற்றிவிழாவில் பேசிய இயக்குநர் லெனின் பாரதி " நூறாண்டு தமிழ் சினிமாவில் ஒரு இஸ்லாமிய வாழ்வியலை பதிவு செய்தது ஒரு மிகப்பெரிய வெற்றி. இந்த வெற்றிக்கு பல பேர் சந்தோஷப்படுறோம் அதே நேரம் பல பேர் தலை குனிய வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. ஏன்னா நூற்றாண்டு தமிழ் சினிமால எத்தனையோ முற்போக்குகள் பேசி இருக்கிறார்கள் ஆனால் ஒரு இஸ்லாமிய வாழ்வியலை ஒரு படத்தில் பதிவு செய்வதற்கு 100 ஆண்டு தேவைப்பட்டிருக்கிறது. அப்போ என்ன மாதிரி ஒரு மோசமான சமூகத்தில நம்ம வாழ்ந்துட்டு இருக்கிறோம் என்பதை பார்க்க வேண்டியதா இருக்கு. இஸ்லாமிய சமூகத்தை சினிமாவில் பேசுவதில் நாம் வட இந்தியாவை விட ரொம்ப பின்தங்கி இருக்கிறோம் என்பதை நம்ம மனப்பூர்வமா ஒத்துக்கணும்." என்றார்
சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வெற்றிபெற்ற சூர்யாவின் கருப்பு திரைப்படத்தை லெனின் பாரதி இந்த நிகழ்வில் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில் " தமிழ் சூழலில் பார்த்தோம் என்றால் ஒரு ஆடி வெள்ளி முதல் சமீபத்தில் வெளியான கருப்பு படம் வரைக்கும் ஒரு மதத்தை பற்றியோ மதத்தினுடைய மூட நம்பிக்கைகளை பற்றியோ படம் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்று திரையரங்கிற்குள் சாமியாடும் கலாச்சாரம் இருப்பதற்கு தைரியமாக படம் எடுக்கிறார்கள். இதற்கு பெரிய பெரிய நடிகர்கள் , தயாரிப்பாளர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் துணை நிற்கிறார்கள். ஆனால் ஒரு இஸ்லாமிய வாழ்வியலை எடுக்கும்போது அத்தனை கைவிரிப்புகள் நடந்தது . அத்தனை தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தை நிராகரித்தார்கள். " என்று கூறினார்
தொடர்ந்து கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோரையும் விமர்சித்து லெனின் பாரதி பேசினார் ' இஸ்லாமியர்கள் மீதும் அவர்களின் கதைகள் மீதும் இந்த தயக்கம் உருவாவதற்கு மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்கள் மிக முக்கியமான காரணம். மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் தங்களது படங்கள் மூலமாக இஸ்லாமிய வெறுப்பை பரப்பினார்கள். கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் தான் இன்று கேரளா ஸ்டோரி மற்றும் துரந்தர் மாதிரியான படங்கள் உருவாவதற்கான அடித்தளமாக கமல்ஹாசனை நான் பார்க்கிறேன். " என்று லெனின் பாரதி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது