அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு.. அவசர விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு
TV9 Tamil News June 29, 2026 09:48 PM

ஜூன் 29, 2026: அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் வழங்கிய நன்கொடைகள் முறைகேடாக கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ தலைமையிலான பல்துறை சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஷீல் நாகு அமர்வு, “சில நாட்கள் கழித்து மனுவை விசாரித்தால் வானம் இடிந்து விழப் போவதில்லை” என்று கருத்து தெரிவித்தது.

அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு:

மனுதாரரான அஜய் குமார் ராய், விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியபோதும், பதிவுத் துறையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அவசரத் தேவையை உறுதிப்படுத்திய பிறகு பட்டியலிடப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

அஜய் குமார் ராய் மற்றும் தினேஷ் குமார் யாதவ் தாக்கல் செய்துள்ள மனுவில், ராமர் கோவில் நன்கொடைகள் திசைதிருப்பப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்து, சுதந்திரமான மற்றும் காலக்கெடுவுக்குள் முடியும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் நிதி முறைகேடுகள் குறித்து சிபிஐ தலைமையிலான பல்துறை விசாரணைக் குழு அமைக்கவும், நன்கொடைகள் நிர்வகிப்பதில் கண்காணிப்பு மற்றும் தணிக்கை அமைப்புகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு, உத்தரப்பிரதேச அரசு மற்றும் அறக்கட்டளைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மனுவில் கோரப்பட்ட விஷயம்:

ஜூன் 13-ஆம் தேதி உத்தரப்பிரதேச அரசு அமைத்துள்ள விசாரணைக் குழுவில் நிர்வாக அதிகாரிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளதால், அதன்மீது பொதுமக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்படாது என்றும், மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க: மொரிஷியஸ் பிரதமரை சந்தித்த பிரதமர் மோடி.. கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆலோசனை!

உச்சநீதிமன்ற இணையதள தகவலின்படி, இந்த வழக்கு ஜூலை 24-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 13 முதல் உச்சநீதிமன்றம் முழுமையாக செயல்பட உள்ளது.

ரூ.79.80 லட்சம் பறிமுதல்:

இதற்கிடையில், உத்தரப்பிரதேச காவல்துறையின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. நன்கொடை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதுடன், ஏழு பேரிடமிருந்து ரூ.79.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முறைகேடாக பெறப்பட்ட பணம் சொத்துகளாக மாற்றப்பட்டதா அல்லது உறவினர்கள் மூலம் மறைக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இந்த விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.