இதைவிட ஒரு நிர்வாகத் திறமையின்மை இருக்க முடியுமா? மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே உச்சக்கட்ட கொடுமை!
எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை July 04, 2026 06:14 PM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் ஏழைகளின் அமுதசுரபியான ‘அம்மா உணவகம்’, அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்போது நோய் பரப்பும் கூடாரமாக மாறியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உணவகத்தின் சமையல் கூடத்திற்குள்ளேயே பாதாள சாக்கடை கழிவுநீர் குளம் போல் குபுகுபுவெனப் பொங்கி வழிந்ததால், சமையல் பணியாளர்களும், உணவு அருந்த வந்த பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

சமையலறையைச் சூழ்ந்த சாக்கடை: அதிர்ச்சியில் பணியாளர்கள்

மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் வந்து செல்கின்றனர். இவர்களின் பசிப்பிணியைப் போக்கும் நோக்கில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனை வளாகத்தின் அருகே அம்மா உணவகம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பாதாள சாக்கடை அடைப்புப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் உச்சக்கட்டமாக, இன்று அரசு மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பாதாள சாக்கடைக் கழிவுநீர், அடைப்பு காரணமாக அம்மா உணவகத்தின் சமையல் கூடத்திற்குள் புகுந்தது. சமையலறை முழுவதையும் சாக்கடை நீர் சூழ்ந்ததால், அசுத்தமான சூழலில், மிகுந்த மனவேதனையுடனும் முகச்சுழிப்புடனும் பணியாளர்கள் சமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

மூக்கை மூடிக்கொண்டு சாப்பிடும் அவலம்!

சாக்கடை நீர் சமையலறைக்குள் புகுந்தது மட்டுமன்றி, பொதுமக்கள் அமர்ந்து சாப்பிடும் இடம் வரை நாரடித்தது. இதனால், பசியோடு உணவருந்த வந்த ஏழை எளிய மக்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள், வேறு வழியின்றி தங்களின் மூக்கைப் பொத்திக்கொண்டே சாப்பிடும் அவலக் காட்சிகள் அரங்கேறின. இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பார்ப்போரை நெஞ்சம் பதற வைக்கிறது.

இது குறித்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கூறுகையில்,

"சமையல் கூடம் முழுவதும் மலம் மற்றும் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால், மேற்கொண்டு இங்கு சமைக்கவே முடியாத ஒரு மோசமான சூழல் உருவாகியுள்ளது. துர்நாற்றத்திற்கு நடுவே தீராத மன உளைச்சலுடன் வேலை செய்து வருகிறோம்" என வேதனை தெரிவித்தனர்.

நகராட்சி, மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு

அம்மா உணவகத்தின் உள்ளே மட்டுமன்றி, வெளியில் உள்ள பிரதான சாலைகளிலும் பாதாள சாக்கடை நீர் ஆறாக ஓடுகிறது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடமும், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்திடமும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் இதுவரை எந்தவொரு ஆக்ஷனும் எடுக்காமல் கும்பகர்ண தூக்கத்தில் ஆழ்ந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கழிவுநீர் தேங்குவதால் அப்பகுதி முழுவதும் கொசுக்கள் உற்பத்தியாகி, டைபாய்டு, டெங்கு போன்ற உயிர்க்கொல்லித் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

முதலமைச்சரின் அறிவிப்பு என்னாச்சு? - பொதுமக்கள் குமுறல்

அம்மா உணவகத்தில் மூக்கை மூடியபடியே உணவருந்திய நோயாளி ஒருவரின் உறவினர் ஆவேசமாகப் பேசுகையில்; "தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்கள் அனைத்தும் மேலும் சீரமைக்கப்பட்டு, நவீனமயமாக்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். ஆனால், மயிலாடுதுறையிலோ முதலமைச்சரின் அறிவிப்புக்கு நேர்மாறாக, சாக்கடை நீரில் ஏழைகளின் உணவு தயாராகும் அவல நிலை நீடிக்கிறது. பசியைப் போக்க வந்தால், எங்களுக்குத் தொற்றுநோய் தான் பரிசாகக் கிடைக்கும் போலிருக்கிறது. தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, இந்த அவல நிலையை மாற்றி, ஏழைகள் நிம்மதியாக உணவருந்த வழிவகை செய்ய வேண்டும்," என்று கொதிப்புடன் தெரிவித்தார்.

ஏழைகளின் பசியாற்றும் ஒரு பொது உணவுக்கூடத்தில் இத்தகைய சுகாதாரச் சீர்கேடு நிலவுவது, மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்தின் நிர்வாகத் திறமையின்மையையே தோலுரித்துக் காட்டுகிறது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, சாக்கடை அடைப்பை நீக்கி, அம்மா உணவகத்தைச் சுத்தப்படுத்த உத்தரவிடுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.