கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1.40 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இங்கு இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் சில்லரை விவகாரம் தொடர்பாகப் பயணிகள் தொடர்ந்து பல்வேறு புகார்களைத் தெரிவித்து வந்தனர். சில்லரை இல்லாத பயணிகளை நடத்துனர்கள் நடுவழியில் இறக்கிவிடுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, உண்மை நிலையை அறியப் போக்குவரத்து அமைச்சர் பைரதி சுரேஷ் இரவு நேரத்தில் பேருந்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் பைரதி சுரேஷ் தனது முகத்தை முககவசத்தால் மூடிக்கொண்டு, நண்பர் ஒருவருடன் ஹெப்பாலில் பேருந்து ஒன்றில் ஏறினார். நாகசெட்டிஹள்ளி செல்ல 2 டிக்கெட்டுகள் கேட்டு நடத்துனரிடம் ரூ.100 நோட்டை வழங்கியுள்ளார். அவர் அமைச்சர் என்று தெரியாத நடத்துனர், சரியான சில்லரை தராவிட்டால் பேருந்தை விட்டு கீழே இறங்குமாறு கூறி, இருவரையும் நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார்.
பேருந்தில் இருந்து இறங்கிய அமைச்சர், உடனடியாக உயர் அதிகாரிகளைத் தொலைபேசியில் அழைத்து விபரத்தைக் கூறினார். சில்லறை தராததால் பயணிகளை இறக்கிவிட்ட நடத்துனர் மற்றும் நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற மற்றொரு பேருந்தின் ஓட்டுநர் ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்ய அவர் உத்தரவிட்டார். அமைச்சர் 2 மணி நேரத்தில் 10 பேருந்துகளில் முகமூடி அணிந்து ஆய்வு நடத்திய இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.