குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
குலசேகரன் முனிரத்தினம் July 27, 2026 10:14 AM

TVK Vijay VCK CPM Vijay: இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவுக்காக தவெக தலைமை ஆர்வமுடன் காத்திருக்கிறதாம்.

CM விஜயின் கூட்டணி ஆட்சி:

சட்டமன்ற தேர்தல் முடிவில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தாலும், விஜய் தலைமையிலான தவெகவால் தனிப்பெரும்பான்மையை பெற முடியவில்லை. இதையடுத்து திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தார். அமைச்சரவையில் இடம்பெற்றாலும் தவெகவின் கூட்டணியில் இல்லை என விசிக கூறிவருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளுமே வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு என தெளிவாக தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளன. இந்த கட்சிகளின் மேற்குறிப்பிடப்பட்ட நிலைப்பாடு, முதலமைச்சர் விஜய்க்கு தலைவலியாக தான் இருக்கும் என ஏற்கனவே பல அரசியல் வல்லுநர்கள் குறிப்பிட்டு இருந்தனர். அந்த வகையில் ஆரம்பம் முதலே அரசுடன் சற்றும் ஒட்டாமல், நேர் எதிரான திசையிலேயே விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

முக்கோண நிலைப்பாட்டில் விசிக

மற்ற எந்தவொரு கட்சியை காட்டிலும் விசிக தங்களது கூட்டணியில் இணைவதை விஜய் தனிப்பட்ட முறையிலேயே மிகவும் விரும்பினார். இதற்காகவே வலிய வந்து அமைச்சரவை வாய்ப்பையும் முன்வைத்தார். ஆனால், அந்த கட்சியின் தற்போதைய நிலைப்பாட்டை பார்த்தால், முடிந்த வரையில் விரைவில் கழற்றிவிட வேண்டும் என்பதே பனையூரின் எண்ண ஓட்டமாக உள்ளதாம். விசிகவைச் சேர்ந்த அமைச்சர் வன்னியரசு முழுமையாக அரசு ஆதரவான நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறார். அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒரு நாள் அரசுக்கு ஆதரவாகவும், மறுநாள் அரசுக்கு நேர் எதிராகவும் பேசி குழப்பமான நிலைப்பாட்டை பின்பற்றி வருகிறார். இந்நிலையில் தான் இவருடைய கட்சியை சேர்ந்த ஆளுர் ஷா நவாஸ் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், ”தமிழ்நாட்டை பாஜக தான் மறைமுகமாக ஆண்டு வருகிறது” என தவெக அரசை விமர்சித்து இருந்தார். இது தவெகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டபடி பேசும் கம்யூனிஸ்ட்கள்:

விசிக ஒருபுறம் என்றால் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருபடி மேலே சென்று தவெகவிற்கு தலைவலியாக மாறியுள்ளன. தோழமை கட்சி என கூறிக்கொண்டு நீட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு இடம் கொடுத்ததோடு, அங்கு முதலமைச்சர் விஜய்க்கு எதிரான மற்றும் அநாகரீகமான விமர்சனங்களை முன்வைக்கவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாய்ப்புகளை வழங்கியுள்ளது. அதே கூட்டத்தில் பங்கேற்ற சிபிஐ முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன், மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் தவெகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இதேகட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், இடநெருக்கடி காரணமாக முதலமைச்சர் அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதை தண்ட செலவு என குறிப்பிடுகிறார். மறுபுறம் சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் பேசுகையில், திமுக மற்றும் தவெக அரசுகளுக்கு இடையே வித்தியாசம் இல்லை என சாடியிருந்தார். அனுமதியின்றி போராடியவர்களை அகற்றியதிற்கு மாணவர்கள் மீது அடக்குமுறை ஏன் என விமர்சித்து இருந்தார். காஞ்சிபுரம் உத்திரமேரூரில் சிப்காட் அமைக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவிற்கு ஆதரவு அளிக்கிறார்.

இதையும் படியுங்கள்: TN Weather News: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை

விஜய் அதிருப்தி - திமுக அனுதாபிகள்

விசிக மற்றும் இடதுசாரிகள் போன்றோரின் பங்களிப்பு தனது அரசில் இருந்தால், நல்ல வழிகாட்டுதல்களுடன் பொதுமக்களிடையே நன்மதிப்பையும் பெற முடியும் என முதலமைச்சர் விஜய் ஆரம்பத்தில் கருதி இருக்கிறார். ஆனால், அண்மைக்காலமக இந்த கட்சிகளின் செயல்பாடானது அவருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். ஏதேனும் மன கசப்புகளோ அல்லது குறைகளோ இருந்தால், நேரடியாக தங்களிடம் வலியுறுத்தினால் அதனை தீர்க்கும் முயற்சியில் தாராளமாக எடுக்கலாம். ஆனால், தொடர்ந்து பொதுவெளியில் விமர்சித்து வருவது தர்மசங்கடமாக இருப்பதாக பனையூர் தரப்பு கருதுகிறதாம்.

மறுபுறம் திமுக கூட்டணியில் இருந்தபோது தான் எந்தவொரு கருத்தையும் சுதந்திரமாக தெரிவிக்க முடியவில்லை. இந்த ஆட்சியிலும் அதே நிலை நீடித்தால் கட்சிக்கு என ஒரு மதிப்பே இருக்காது என விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கருதுகின்றனவாம். அதன் காரணமாக அரசுக்கு ஆதரவு அளித்தாலும், அதன் செயல்பாட்டை விமர்சிப்பதில் மும்முரம் காட்டுகின்றனவாம். இதன் மூலம் தங்களை நடுநிலையானவர்கள் என காட்டிக்கொள்வதோடு, கட்சியை வளர்க்க முடியும் என நம்புகின்றனராம். அனுபவமில்லாத ஆட்சியாளர்களுக்கு ஏன் வளைந்துகொடுக்க வேண்டும் என ஒருதரப்பு கருத, விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் உள்ள திமுக அனுதாபிகளால் இன்னமும் தவெக அரசை ஏற்க முடியவில்லையாம்.

இடைத்தேர்தலுக்கு காத்திருக்கும் விஜய்:

234 உறுப்பினர்களை கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம்.  தற்போது தவெக சொந்தமாக 106 உறுப்பினர்களின் ஆதரவை கொண்டுள்ளது. இதுபோக காங்கிரஸ் 5, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் தலா இரண்டு உறுப்பினர்கள் மற்றும் மன்னார்குடி எம்.எல்.ஏ ஒருவர் என 14 உறுப்பினர்களின் ஆதரவை கொண்டுள்ளது. இதனிடையே, காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 5 தொகுதிகளையாவது வென்று விட வேண்டும் என தவெக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறதாம். அதன் மூலம் தவெகவின் பலம் மட்டும் 111 ஆக உயரும். இதுபோக காங்கிரஸ், ஐயுஎம்எல் மற்றும் ஒரு சுயேச்சையின் ஆதரவுடனேயே தவெக பெரும்பான்மையை பெற முடியும். அதன் பிறகு விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்திருக்க வேண்டியதில்லை. ஒருவேளை 7 தொகுதிகளிலும் வென்றால் காங்கிரசின் ஆதரவு மட்டுமே போதுமானதாக இருக்கும்.

ஒருவேளை இடைத்தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால், குடைச்சல் கொடுக்கும் கட்சிகளை வெளியேற்றிவிட்டு, பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வந்து அமைச்சரவையில் இடம் கொடுக்கவும் தவெக திட்டமிட்டுள்ளதாம். திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை விட தவெக ஆட்சியில் தொடர்வதையே மத்தியில் ஆளும் பாஜகவும் விரும்புகிறதாம். இதனால் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இதில் தவெக அரசுக்கு சாதகமான உத்தரவு கிடைக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.