நடிகர் ராம் சரண், ‘பெத்தி’ படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயத்திற்காக கோயம்புத்தூரில் உள்ள கங்கா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். தமிழ் நாட்டில் அப்போலோ போன்ற முன்னணி மருத்துவமனைகள் இருக்கையில், ராம் சரண் ஏன் கோயம்புத்தூரில் உள்ள கங்கா மருத்துவமனையை சிகிச்சைக்காக தேர்வு செய்தார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
ராம் சரண் நடிப்பில் வெளியான ‘பெத்தி’ திரைப்படம் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் ராம் சரணின் வலது மணிக்கட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்த காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
ராம் சரணுக்கு ஏற்பட்டது வலது மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட கார்டிலேஜ் கிழிவு (wrist cartilage tear) என கூறப்படுகிறது. இதற்காகவே கோயம்புத்தூரில் உள்ள கங்கா மருத்துவமனையில் அவருக்கு மணிக்கட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
பொதுவாக சினிமா பிரபலங்கள் உடல்நல சிகிச்சைகளுக்காக சென்னை, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் உள்ள முன்னணி மருத்துவமனைகளை நாடுவது வழக்கம். குறிப்பாக அப்போலோ போன்ற மருத்துவமனைகள் இருக்கும் நிலையில், ராம் சரண் கோயம்புத்தூரை தேர்வு செய்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு காரணம், கங்கா மருத்துவமனை கை மற்றும் மணிக்கட்டு அறுவை சிகிச்சைகளில் சிறப்பு பெற்ற மருத்துவ நிறுவனமாக இருப்பதுதான். குறிப்பிட்ட ஒரு சிகிச்சையில் அனுபவம் பெற்ற மருத்துவர்களை தேர்வு செய்வது முக்கியம் என்பதால், ராம் சரண் இந்த மருத்துவமனையை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. கை மற்றும் மணிக்கட்டு தொடர்பான சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்காக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து நோயாளிகள் கங்கா மருத்துவமனையை அணுகி வருகின்றனர். இதன் காரணமாகவே ராம் சரணின் சிகிச்சை கோயம்புத்தூரில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராம் சரணின் காயம் மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவர் முத்துகிருஷ்ணன் கூறுகையில், "கங்கா மருத்துவமனையைப் பற்றி நாம் இன்னும் அதிகம் புரிந்து கொள்ள வேண்டும்.கோவையில் உள்ள கங்கா மருத்துவமனை, எலும்பியல் (Orthopaedics), அதிர்ச்சி சிகிச்சை (Trauma), கை மற்றும் மணிக்கட்டு அறுவை சிகிச்சை, மற்றும் மைக்ரோ சர்ஜரி (Microsurgery) ஆகியவற்றிற்கான தெற்காசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரத்யேக சிறப்பு மையங்களில் ஒன்றாகும்.
அதனால்தான், தனது மனைவி உபாசனாவின் குடும்பத்திற்கு அப்போலோ மருத்துவமனையுடன் தொடர்புகள் இருந்தபோதிலும், ராம் சரண் தனது சிக்கலான மணிக்கட்டு அறுவை சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்தார். இத்தகைய அறுவை சிகிச்சைகளில் கங்கா மருத்துவமனை நிகரற்ற நிபுணத்துவம் பெற்றுள்ளது.
எலும்பியல், அதிர்ச்சி சிகிச்சை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைத் துறையின் தலைவர் டாக்டர் எஸ். ராஜசேகரன், எலும்பியல் அறுவை சிகிச்சைத் துறையில் பங்களித்த உலகின் முதல் 1% சிறந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தால் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார்.கங்கா மருத்துவமனை மிகவும் சிக்கலான கை மற்றும் மூட்டு தொடர்பான சிகிச்சைகளை அதிக அளவில் கையாண்டு, உலகத்தரம் வாய்ந்த முடிவுகளைத் தருகிறது.”