ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 7.1ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை..
TV9 Tamil News July 28, 2026 08:48 PM

ஜூலை 28, 2026: ஜப்பானின் தெற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தெற்கு ஜப்பானின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷூவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி கடலின் அடிப்பகுதியில், சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்:

The moment the 6.8-magnitude #earthquake struck a shopping center in #Kumamoto (Japan, about an hour ago). pic.twitter.com/60mnb4SLVe

— Alex Terry (@AlexTerry17482) July 28, 2026


இந்த நிலநடுக்கத்தால் சிலர் காயமடைந்துள்ளதாகவும், ஒரு கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாகவும் ஜப்பான் பிரதமர் சனாய் தகாயிச்சி தெரிவித்துள்ளார். இருப்பினும் உயிரிழப்புகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கியூஷூ தீவின் ஊகி , மகிசானோ உள்ளிட்ட பகுதிகளில் அதிர்வுகள் அதிகமாக உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நிலநடுக்கத்தின் மையம் நாகசாகி நகரிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சில விநாடிகள் நீடித்த கடுமையான நில அதிர்வால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். பலர் திறந்தவெளி இடங்களில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்திற்குப் பிறகு கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவையெனில் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாகச் செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை:

மேலும், கடலில் உள்ள மீனவர்கள் மற்றும் கப்பல் பணியாளர்கள் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சொத்து சேதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதன் முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சேத நிலவரத்தை உடனடியாக மதிப்பீடு செய்யுமாறு ஜப்பான் பிரதமர் அலுவலகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மனித உயிர்களுக்கு அதிகபட்ச முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், எந்தவித அலட்சியமும் காட்டக் கூடாது என்றும் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க: உருகும் பனி.. அபாயம் தரும் 56,000 புதிய ஏரிகள்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

இதற்கிடையில், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அணு மின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வில் எந்தவித அசாதாரண நிலையும் அல்லது கதிரியக்க கசிவும் பதிவாகவில்லை என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, புகுயோகா, சாகா, ஓயிட்டா மற்றும் மியாசாகி உள்ளிட்ட பகுதிகளுக்கு அவசர நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் ஜப்பானில் பதிவாகும் இரண்டாவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். இதற்கு முன்பு ஜூன் 25-ஆம் தேதி வடக்கு ஜப்பானில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அப்போது பெரிய அளவில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட என்ன காரணம்?

உலகிலேயே அதிக நிலநடுக்கங்கள் ஏற்படும் நாடுகளில் ஜப்பான் முக்கியமான ஒன்றாகும். பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள “ரிங் ஆஃப் ஃபயர்” எனப்படும் புவியியல் வளையப் பகுதியில், நான்கு முக்கிய புவித்தட்டுகள் சந்திக்கும் இடத்தில் ஜப்பான் அமைந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் அந்நாட்டில் பதிவாகுகின்றன. உலகளவில் ஏற்படும் மொத்த நிலநடுக்கங்களில் சுமார் 18 சதவீதம் ஜப்பானிலேயே நிகழ்கின்றன.

மேலும் படிக்க: ஹோர்முஸ் நெருக்கடிக்கு மத்தியில் ட்ரம்ப் எடுத்த முக்கிய முடிவு.. கச்சா எண்ணெய் விலை குறையுமா?

கடந்த 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் ரிக்டர் அளவுகோலில் 9.0 ஆக பதிவான கடலடிப் பகுதி நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி உலகையே உலுக்கியது. அந்த பேரிடரில் சுமார் 18,500 பேர் உயிரிழந்தனர் அல்லது மாயமானனர். மேலும், ஃபுகுஷிமா அணு மின் நிலையம் கடுமையாக சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.