அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
ஸ்ரீராம் ஆராவமுதன் July 28, 2026 09:14 PM

அமெரிக்காவில் குடியேற்றம் தொடர்பாக ஒரு முக்கிய முன்மொழிவு வெளிவந்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு மத்தியில், மூத்த ஜனநாயகக் கட்சி செனட்டர் அலெக்ஸ் படில்லா ஒரு புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த மசோதா, மில்லியன் கணக்கான நீண்டகால குடியிருப்பாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை அல்லது க்ரீன் கார்டு பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, குறிப்பாக H-1B விசாக்களில் அமெரிக்காவில் பணிபுரிந்து பல ஆண்டுகளாக க்ரீன் கார்டுக்காகக் காத்திருக்கும் இந்தியத் தொழில் வல்லுநர்களுக்கும் க்ரீன் கார்டு கிடைக்க வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலிஃபோர்னியா செனட்டர் அலெக்ஸ் படில்லா, '1929 ஆம் ஆண்டின் குடிவரவுச் சட்டத்தின் குடிவரவு விதிகளை புதுப்பித்தல்' என்ற தலைப்பிலான மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த முன்மொழிவின்படி, குறைந்தது 7 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அமெரிக்காவில் வசித்துவரும் நபர்களுக்கு, அவர்கள் குற்றப் பதிவு ஏதுமின்றி, க்ரீன் கார்டுக்கான மற்ற அனைத்து சட்டத் தேவைகளையும் பூர்த்தி செய்தால், நிரந்தர வசிப்பிட உரிமைகள் வழங்கப்படும்.

இந்த விதிமுறை கடைசியாக எப்போது புதுப்பிக்கப்பட்டது.?

இந்த மசோதா, 1986-ம் ஆண்டு கடைசியாக புதுப்பிக்கப்பட்ட, அமெரிக்காவின் காலாவதியான பதிவேட்டு விதியைத் திருத்த முற்படுகிறது. தற்போதைய விதியின்படி, ஜனவரி 1, 1972-க்கு முன்பு அமெரிக்காவில் வசித்தவர்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த விதி, இந்த வசதியை நடைமுறையில் பயனற்றதாக ஆக்கியுள்ளது. மேலும், மிகச் சிலரே இதன் மூலம் பயனடைய முடிகிறது. பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து, பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்குப் பங்களித்த கடின உழைப்புள்ள குடியேறிகளுக்கு ஆதரவாக இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியதாக செனட்டர் படில்லா கூறினார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள், மில்லியன் கணக்கான குடும்பங்களை தொடர்ச்சியான அச்சத்திலும், நிச்சயமற்ற நிலையிலும் வாழச் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். அமெரிக்கா தனது குடிவரவுச் சட்டங்களை நவீனமயமாக்கி, நீண்டகால குடியிருப்பாளர்களுக்கு சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பிடத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறினார்.

பலதரப்பட்ட மக்கள் பயனடையலாம்

இந்த மசோதா பலதரப்பட்ட மக்களுக்கு பயனளிக்கும். இதில், 'ட்ரீமர்ஸ்' (Dreamers), தற்காலிகப் பாதுகாப்பு அந்தஸ்து (Temporary Protected Status) பெற்றவர்கள், அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், நீண்ட கால விசா வைத்திருப்பவர்களின் குழந்தைகள் மற்றும் உயர் திறன் கொண்ட தொழில் வல்லுநர்கள் ஆகியோர் அடங்குவர்.

மேலும், H-1B விசாக்களில் பணிபுரியும் இந்தியத் தொழில் வல்லுநர்களும் இந்த பிரிவில் அடங்குவர். வேலைவாய்ப்பு அடிப்படையிலான க்ரீன் கார்டுகளுக்கு இந்தியத் தொழில் வல்லுநர்கள் மிக நீண்ட காத்திருப்பு காலத்தை எதிர்கொள்கின்றனர். இதற்குக் காரணம், அமெரிக்காவின் ஒரு நாட்டிற்கான வரம்புக் கொள்கையாகும். இது இந்தியாவிலிருந்து வரும் விண்ணப்பங்களில் ஒரு பெரிய தேக்கநிலையை உருவாக்கியுள்ளது. பல இந்தியத் தொழில் வல்லுநர்கள் க்ரீன் கார்டுக்காக பல ஆண்டுகள், சில சமயங்களில் பல பத்தாண்டுகள் கூட காத்திருக்க வேண்டியுள்ளது. அத்தகைய சூழலை இந்த புதிய மசோதா நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், லட்சக்கணக்கான இந்திய குடியேறிகள் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.