தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
கு. அஜ்மல்கான் August 19, 2026 03:44 PM

கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பட்டியல்

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள தவெக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ள நிலையில், அந்த கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வெளியான அறிவிப்பு தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், குஜிலியம்பாறை வட்டாச்சியர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி, ஆகியவற்றை சேகரித்து வருவாய் ஆய்வாளர்கள் வட்டாட்சியரிடம் 18.08.2026 இன்று மாலைக்குள் நேரடியாக சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. அனைத்து கிராம உதவியாளர்களும் வருவாய் ஆய்வாளர்களுக்கு உதவிட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

 வட்டாட்சியர் உத்தரவு - அதிமுக விளாசல்

அறிக்கை அளிக்க தவறும் உதவியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட்டாட்சியர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.  இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர். இது தொடர்பாக அதிமுக ஐடி பிரிவு வெளியிட்டுள்ள பதிவில், திண்டுக்கல் மாவட்டத்தின் குஜிலியம்பாறை தாலுகாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்களின் தரவுகளை சேகரிக்க உத்தரவிட்டு வட்டாட்சியர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

ஆதரவு அளித்த தோழர்களுக்கே குஜிலிமஸ்து செய்யப் போகிறதா ஆச்சரியக்குறி அரசு? ஒருவேளை இன்னும் அதிகாரப் பூர்வமாக கூட்டணிக்குள் வரவில்லை என்பதால் கொடுக்கப்படும் மிரட்டலா இது?  குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது என்று உருட்டி இந்த ரசிக வெறி கும்பலுக்கு ஆதரவு கொடுத்த தோழர்களை பிரிட்டிஷ் காலத்து கைரேகை சட்ட பாணியில் கையாள முனைவது கடும் கண்டனத்திற்குரியது. 

பின் வாங்கிய தமிழக அரசு

தேசிய கட்சி அந்தஸ்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேசிய அளவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை ஏதோ தீவிரவாத இயக்கம் போல இந்த அரசு நடத்துவதற்கான விளக்கத்தை கண்டிப்பாக அளிக்க வேண்டும். இது கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது மட்டுமல்ல - ஒட்டுமொத்த ஜனநாயக அரசியலமைப்பு மீதான கொடுங்கோல் தாக்குதல்! என அதிமுக விமர்சித்துள்ளது. இதனிடையே குஜிலியம்பாறை வட்டாட்சியரின் உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. மேலும் வட்டாட்சியரும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.