திருமணம் மறுப்பு: மானாமதுரையில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; தந்தை, மகன் கைது !
மானாமதுரை அருகே திருமணம் செய்து தர மறுத்ததால் தகராறு – சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; தந்தை, மகன் கைது.
உறவினர் பெண்ணை திருமணம் செய்து தருமாறு தொல்லை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட தெ.புதுக்கோட்டை அருகே உள்ள சின்ன புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன் (29). இவர் சட்டக் கல்லூரியில் படித்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது உறவினரான முருகேசனின் மகளை திருமணம் செய்து தருமாறு சிவபாலன் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்ததாகவும், இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில், இன்று சிவபாலனுக்கும், முருகேசனின் மகன் அருண்ராஜாவுக்கும் (19) இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவபாலன் வாளால் தாக்க முயன்றதாக அருண்ராஜா தனது தந்தை முருகேசனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முருகேசன், சிவபாலனிடம் சென்று விசாரித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட மோதலில் முருகேசன் அரிவாளால் சிவபாலனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சிவபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த மோதலில் முருகேசனுக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருவரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மானாமதுரை போலீசார், சிவபாலனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக முருகேசன் (50), அவரது மகன் அருண்ராஜா (19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவத்திற்கான காரணம் மற்றும் கொலை நடைபெற்ற விதம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் மற்றும் மானாமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை போலீசார் தடுப்பதாக பத்திரிகையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செய்தியாளர்கள் தங்களது பணியை சுதந்திரமாக மேற்கொள்ள காவல்துறை உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.