சிங்கம்புணரி காவல் நிலையத்தில் முன்பு பணியாற்றிய அதிகாரி ஒருவருக்கு பணம் பெற்றுக் கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியையும் வெளியிட்டிருந்தார்.
சிங்கம்புணரி - புத்தூர்கட்டு பாண்டி
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அருகே ஆத்திகாடு பகுதியைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன் (45). இவர் சிங்கம்புணரியில் ‘புத்தூர்கட்டு பாண்டி’ என்ற பெயரில் எலும்பு முறிவு, முடக்குவாதம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். சமூக வலைதளங்களில் பிரபலமடைந்ததால் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் அவரிடம் சிகிச்சைக்காக வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், முறையான மருத்துவக் கல்விச் சான்றிதழ் இல்லை என இணை இயக்குநர் அளித்த புகாரின் பேரில், கடந்த ஜனவரி மாதம் சிங்கம்புணரி போலீசார் நெடுஞ்செழியனை கைது செய்து, அவரது மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், தனது தோப்பில் ‘செம்புவேல் முருகன்’ என்ற பெயரில் கோயில் அமைத்து அங்கு சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
நெடுஞ்செழியன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ
இதற்கிடையே, நெடுஞ்செழியன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோவில், தற்போது சிங்கம்புணரி காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் சீனிபாபு மாதந்தோறும் பணம் கேட்டு தொல்லை கொடுப்பதாகவும், பணம் கொடுக்காவிட்டால் பொய் வழக்கு பதிவு செய்வதாக மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், சிங்கம்புணரி காவல் நிலையத்தில் முன்பு பணியாற்றிய அதிகாரி ஒருவருக்கு பணம் பெற்றுக் கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியையும் அவர் வெளியிட்டிருந்தார்.
புகார் தொடர்பாக தலைமைக் காவலர் ஜெயராஜிடமும் விசாரணை
இந்த வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, ராமநாதபுரம் சரக டிஐஜி மணிவண்ணன் விசாரணை மேற்கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் முன்னாள் காவல் ஆய்வாளருக்கு பணம் பெற்றுக் கொடுத்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பாக தலைமைக் காவலர் ஜெயராஜிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் அடிப்படையில், சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் சீனிபாபு மற்றும் தலைமைக் காவலர் ஜெயராஜ் ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டிஐஜி மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.