Prasanth:" டாக்டராக வேண்டிய நான் விதியால நடிகன் ஆகிட்டேன்.." மனம் திறந்த டாப் ஸ்டார் பிரசாந்த்
சுகுமாறன் August 23, 2026 11:44 PM

தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் விஜய், அஜித்தைக் காட்டிலும் மிகப்பெரிய நடிகராக உலா வந்தவர் நடிகர் பிரசாந்த். டாப்ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரசாந்த் திரையுலகின் உச்சத்தில் இருந்தபோது அளித்த பேட்டியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

அதில் அவர் கூறியிருப்பது குறித்து கீழே காணலாம். அந்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 

டாக்டராக வேண்டிய நான்:

நான் சினிமாவில் நுழையும்போது எனக்கு வயது 17. கண்ணைக் காட்டி காட்டில் விட்டது போல இருந்தது. சினிமா என்றால் என்னவென்று தெரியாது. நடிப்பு என்றால் என்னவென்று தெரியாது. ஒரு டாக்டராக வேண்டிய நான் விதி வசத்தால் நடிகர் ஆகிவிட்டேன்.

என்னோட முதல் படமே வெள்ளி விழா படம். அதைத்தொடர்ந்தும் ஏராளமான வெள்ளி விழா படங்களில் நடித்துள்ளேன். வைகாசி பொறந்தாச்சு அதான் என் முதல் படம். அந்த படத்தில் ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டேன். அதன்பிறகு மலையாளத்தில் பெரும்தட்சன் என்ற படத்தில் நடித்தேன். அதற்கு தேசிய விருது கிடைத்தது. அது முடிந்த பிறகு வைகாசி பொறந்தாச்சு இந்தியில் ஐ லவ் யூ என்று நடித்தேன்.

மறக்க முடியாத செம்பருத்தி:

என்னோட திரை வாழ்வில் மறக்க முடியாத படம் செம்பருத்தி. கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை போன்ற பிரம்மாண்ட திரைப்படம் கொடுத்த ஆர்கே செல்வமணி காதலையும் பிரம்மாண்டமாக காட்ட முடியும் என்று காண்பித்தார்.  செம்பருத்தி கதையை கேட்டபோது ரொம்ப த்ரில்லாக இருந்தது. இந்த கதை எனக்காகவே எழுதியது போல இருந்தது.

மறக்க முடியாது:

நீங்கள் கேட்டவை என்று எங்க அப்பாவை வைத்து பாலுமகேந்திரா சார் ஒரு படம் செய்தார். அவர் என்னை வைத்து வண்ண வண்ணப் பூக்கள் படத்தை இயக்கியது சந்தோஷமாக இருந்தது. திருடா திருடா மணிரத்னம் டைரக்ஷன். அனைத்து நடிகர்களும் அவரது படத்தில் நடிக்க ஆசைப்படுவார்கள். எனக்கு சின்ன வயசுலேயே அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு சந்தோஷப்படுகிறேன். லொகேஷன் வந்தா அவருண்டு அவர் வேலையுண்டு என்று இருப்பார். நடிகர்களிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதில் மணிரத்னம் கில்லாடி. அவர் இயக்கத்தில் நடித்ததை எப்போதும் மறக்கவே முடியாது.

ஆணழகன் படத்திற்காக ஒரு நாளைக்கு 2, 3 முறை ஷேவ் செய்தேன். ஒரு பெண் எப்படி கஷ்டப்படுகிறாள் என்பதை அந்த படம் பண்ணும்போதுதான் அறிந்து கொண்டேன். என்னோட கேரியரின் திருப்புமுனையாக இந்தியாவின் நம்பர் 1 இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் நடித்ததைத்தான் நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசியிருப்பார்.

உச்ச நடிகராக உலா:

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த பிரசாந்த் வைகை பொறந்தாச்சு என்ற படம் மூலமாக 1990ல் அறிமுகமானார். செம்பருத்தி, ஆணழகன், ஜீன்ஸ்,  கண்ணெதிரே தோன்றினாள், பூமகள் ஊர்வலம், ஜோடி, குட்லக், பார்த்தேன் ரசித்தேன், பிரியாத வரம் வேண்டும், ஸ்டார், சாக்லேட், மஜ்னு, வின்னர் என பெரிய வெற்றிப்படங்களின் நடித்துள்ளார்.

காதல் நாயகனில் இருந்து ஆக்ஷன் நாயகனாக உருவெடுத்த பிரசாந்தால் அதன்பின்பு திரையில் பெரியளவில் கோலோச்ச இயலவில்லை. தமிழில் அவர் கடைசியாக கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.