மதுரை பாலிடெக்னிக் விடுதியில் நரக வாழ்க்கை? இடிந்துவிழும் கட்டிடம், புழு உணவு!
அருண் சின்னதுரை August 22, 2026 06:44 PM

புழுக்களுடன் கூடிய உணவுப்பொருட்கள், தண்ணீரில் மிதக்கும் கரப்பான் பூச்சிகள், குப்பை குடோன் போல காட்சியளிக்கும் அறைகள், சிதறிகிடக்கும் சமையல் பொருட்கள்.

விடுதி - கட்டடம் முழுவதிலும் இடிந்து விழும் வகையில் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது 
 
மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக் ஆண்கள் மற்றும் மகளிர் கல்லூரியில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ  மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி வளாகத்திற்கு உள்ளே மாணவர்கள் தங்கும் விடுதி பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட நிலையில் கட்டடம் முழுவதிலும் இடிந்து விழும் வகையில் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது 
 
உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தோடு தங்கி வருகின்றனர்
 
இதனால் அங்கு தங்கியுள்ள 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தோடு தங்கி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இடிந்துவிழும் நிலையோடு செயல்பட்டுவரும் இந்த விடுதியில் அறை முழுவதும் குப்பை கிடங்கு போல மாறியுள்ளது. சமையலறை மற்றும் கழிவறைகள் பேய் படங்களில் வரும் அறைகள் போல அச்சுறுத்தலாக காணப்படுகிறது. சமையலறையில் உள்ள பொருட்கள் அழுகி புழுவோடு சமையலறையில் இருப்பதும், தண்ணீர் தொட்டிகளில் கரப்பான் பூச்சிகள் மிதப்பது, தட்டுகளில் புழு, கழிவறையில் கதவு, பைப்பில் தண்ணீர் இல்லாதது என நரக வாழ்க்கையை மாணவர்கள் அனுபவித்துவருகின்றனர். தங்களது ஏழ்மை காரணமாக அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் இதனை வெளியில் கூட சொல்ல முடியாமல் தவித்துவருகின்றனர்.
 
சுவர்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் ஆபத்தான நிலை
 
மேலும் சுவர்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் ஆபத்தான நிலையில் உள்ளதால் அபாயம் என எழுதிவைத்து பயன்படுத்திவரும் அவல நிலை உள்ளது. மேலும் விடுதி கழிவறை, சமையலறை, அறைகளின் ஜன்னல்கள் முழுவதும் இடிந்துவிழுந்துள்ளதால் பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் விடுதிக்குள் வந்துசெல்கின்றனர். Genz காலகட்டத்தில் இது போன்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி தங்கு விடுதி பழங்கால கட்டடங்களில் செயல்பட்டுவருவது மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்துவருகிறது.
 
புழுக்களோடு இருப்பதால் மாணவர்கள் சாப்பிடுவதையே தவிர்த்து வருகின்றனர்
 
உணவுப்பொருட்கள் பாதுகாப்பு இன்றி குப்பைகள் போல கொட்டப்பட்டு, புழுக்களோடு இருப்பதால் மாணவர்கள் சாப்பிடுவதையே தவிர்த்துவருகின்றனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திற்கு பலமுறை கூறியும் கல்லூரி  நிர்வாகமும் அரசுக்கு பல முறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கைகள் எடுக்காத நிலையில் மாணவர்களின் உயிர்கள் கேள்விக்குறியாகியுள்ளது.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.