மெட்ரோ நிலையத்தில் பூனைக்கு வேலை.. தலைமை அதிகாரியாக நியமனம்!
பேச்சி ஆவுடையப்பன் August 23, 2026 07:44 PM

மெட்ரோ ரயில் நிலையத்தில் பூனை ஒன்று வேலைக்கு அதிகாரப்பூர்வமாக பணியமர்த்தப்பட்டுள்ள சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அது எப்படி நடந்தது என பார்க்கலாம்.

நாம் பயன்படுத்தும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மெட்ரோ நிலையங்களில் நாய், பூனை போன்ற விலங்குகள் தங்கி காவல் காக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம். அப்படியாக மும்பையின் குண்டவலி மெட்ரோ நிலையத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மும்பை மெட்ரோவின் 7வது வழித்தடமான இந்த பாதையில் மெட்ரோ நிலையத்தின் நுழைவாயிலில் எப்போதும் ஒரு பூனை காணப்படுவது வழக்கம். இதனைக் கண்ட சந்தோஷ் சமந்த் என்ற பயணி ஒருவர் அந்த பூனையை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். அதில் ஊதியம் பெறாத அந்தப் பாதுகாவலருக்கு அதிகாரிகள் ஒரு அதிகாரப்பூர்வப் பதவியை வழங்க வேண்டும். அது தற்போது இலவசமாகப் பணியாற்றி வருகிறது என்று வேடிக்கையாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சந்தோஷ் சமந்த் கோரிக்கையை மகா மும்பை மெட்ரோ செயல்பாட்டுக் கழகம் லிமிடெட் ஏற்றது. 

இதனைத் தொடர்ந்து மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “இதுதான் எங்கள் தலைமைப் பூனை அதிகாரி. நிலைய ஆய்வுகள், பயணிகளைக் கண்காணித்தல் மற்றும் அனைவரும் ரசிக்கும்படியான சரியான இடத்தில் அமர்ந்திருப்பது ஆகியவை அதன் பொறுப்புகளில் அடங்கும். இதுவரை, அதன் செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளது என தெரிவித்துள்ளது. 

பரபரப்பான அந்த மெட்ரோ ரயில் நிலையம் வழியாகச் செல்லும் மக்களுக்கு அந்த பூனை மகிழ்ச்சியான ஒன்றாக மாறியுள்ளது. எப்போது ரயில் நிலையத்தில் காணப்படும் அதனை பலரும் வேடிக்கையுடன் சீண்டுவது வழக்கம். மிகவும் அமைதியாக, யாருக்கும் தொந்தரவு செய்யாத அந்த பூனையின் செயல்பாடு களைப்புடன் வரும் பயணிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியாக அமைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பில் கீழ்  பலரும் தெரிவித்துள்ளனர். 

இது விலங்குகள் உட்பட அனைவர் மீதும் நீங்கள் காட்டும் அக்கறையையும் கவனத்தையும் காட்டுகிறது என மெட்ரோ ரயில் நிர்வாகத்தை பலரும் பாராட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள நாய், பூனைகளை புகைப்படம் எடுத்து அவர்களுக்கும் வேலை வாங்கி தருமாறு சிலர் கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.