தமிழகத்தில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSME) 5 ஆண்டுகளுக்கு 100 சதவீதம் மின்சார வரி விலக்கு அளிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் மின் கட்டணச் செலவைக் குறைக்கும் வகையில், சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்து அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
தங்களின் தொழில் நிறுவனக் கட்டடங்களில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களை அமைப்பதற்கு ஏதுவாக, மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தொழில் முனைவோர்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தொழில் முனைவோரின் இந்தக் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, 'வெற்றி சோலார் திட்டத்தின்' கீழ் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி விலக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்காகத் தகுதியுள்ள நிறுவனங்களுக்கு மின்சார வரி விலக்கு வழங்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட மின் துறை ஆய்வு மேற்கொண்டு வருவதாக, எரிசக்தித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆலைகளின் மின் பயன்பாட்டுக் கட்டணத்தில் 5 சதவீதமும், சொந்தப் பயன்பாட்டிற்காக மின் நிலையம் அமைத்துள்ளவர்கள் உபரி மின்சாரத்தை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்யும்போது மின் பயன்பாட்டுக் கட்டணத்தில் 5 சதவீதமும் மின்சார வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும், சொந்த மின் உற்பத்தி நிலையங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தைத் தாமே பயன்படுத்தும்போது யூனிட்டிற்கு 10 காசு மின்சார வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய அறிவிப்பு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்குப் பெரிய நிவாரணமாக அமையும்.