அமைச்சரவையில் இருந்து மரிய வில்சனை நீக்குங்க.! தவெக அரசுக்கு எதிராக அடித்து ஆடும் நயினார் நாகேந்திரன்
கு. அஜ்மல்கான் August 26, 2026 12:14 PM

லஞ்சம் கொடுத்தேன்- மரியவில்சன் பேச்சு

தமிழக சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின் விவாதத்தின் மீது பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன், தனது பள்ளிக்கு அனுமதி வாங்க லஞ்சம் கொடுத்தாகவும், இதற்கு நானே சாட்டி, நானே ஆதாரம் என பேசியிருந்தார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் லஞ்சம் கொடுத்தது குற்றம் என அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், முந்தைய திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் அவர்களுக்கு, லஞ்சம் கொடுத்ததை பகிரங்கமாக சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்ட தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் மீதும் முன்னாள் கல்வியமைச்சர் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.  

விளம்பரம் தேடுவதன் அவசியம் என்ன?

லஞ்சம் கேட்டவர் மீது மரிய வில்சன் அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி எவ்வித புகாரும் அளிக்காமல்,  இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் கூறி விளம்பரம் தேடுவதன் அவசியம் என்ன?  குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்கும் வகையில் மரிய வில்சன் அவர்களின் கல்வி நிறுவனத்தில் என்ன சட்டரீதியான குறைபாடுகள் உள்ளன? தனது தனிப்பட்ட நலனுக்காக லஞ்சம் கொடுத்து, தனது காரியத்தை முடித்துக் கொள்ளும் குணநலன் கொண்ட மரிய வில்சன் அவர்களை முக்கிய அமைச்சர் பதவியில் அமர்த்தினால், அரசு இயந்திரம் எப்படி நேர்மையாக இயங்கும்? 

மரிய வில்சனை அமைச்சரவையில் இருந்து நீக்குங்க

எனவே, ஒப்புதல்கள் அல்லது அனுமதிகளைப் பெற ஒரு அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுத்ததற்காக ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 8, ஊழல் செயலுக்குத் துணை போனதற்காக பிரிவு 12, சட்ட நடைமுறைகளைத் தவிர்ப்பதற்காக லஞ்சம் வழங்கியதற்காக BNS-இன் பிரிவு 61 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், மரிய வில்சன் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து, சமரசமின்றி முறையாக விசாரிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை, மரிய வில்சன் அவர்களை அமைச்சரவையில் இருந்து முதல்வர் விஜய் அவர்கள் நீக்க வேண்டும்! என அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.