தமிழ் சினிமாவில் தந்தை - மகள் உறவை மையமாகக் கொண்டு உருவான முக்கியமான படங்களில் ஒன்று ‘தங்க மீன்கள்’. இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால், இந்தப் படத்தில் முதலில் வேறு ஒரு நடிகர் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தது பலர் அறியாத தகவல்
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அந்த நடிகர், கருணாஸ் ‘தங்க மீன்கள்’ படத்துக்காக முதலில் தன்னை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்ததாக தெரிவித்துள்ளார். படத்தின் பணிகள் தொடங்கிய நிலையில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ராமிடம் ஒரு ஆலோசனையை முன்வைத்துள்ளார்.
தனக்குப் பதிலாக ராமே அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ராம் கதாநாயகனாக நடிக்க முடிவு செய்துள்ளார். இதனால் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த கருணாஸ் படத்தில் இருந்து விலகியுள்ளார்.
2013-ம் ஆண்டு வெளியான ‘தங்க மீன்கள்’, ராம் நடிப்பில் முக்கியமான படமாக அமைந்தது. தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்ட இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இதேபோல், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ படத்திலும் முதலில் தான் நடிக்க வேண்டியிருந்ததாக கருணாஸ் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். படத்தின் கதையை கேட்ட பிறகு, அந்தக் கதாபாத்திரத்துக்கு ஒரு பெரிய ஹீரோ நடித்தால் சரியாக இருக்கும் என தான் நினைத்ததாகவும், அதன் பின்னர் தனுஷ் அந்தப் படத்தில் நடித்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், தற்போது நிமிஷா சஜயனுடன் இணைந்து ‘என்ன விலை’ திரைப்படத்தில் கருணாஸ் நடித்துள்ளார். சஜீவ் பழூர் இயக்கியுள்ள இப்படத்தில் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படம் செப்டம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.