நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த ‘மண்டாடி’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில், அவரது அடுத்த படம் குறித்த தகவல் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், படத்தை இயக்குநர் ரவிக்குமார் இயக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக மாறிய சூரி, தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான ‘மண்டாடி’ அவரது கதாநாயகனாக வெளியான ஐந்தாவது திரைப்படமாக அமைந்துள்ளது.
மீனவர்களின் வாழ்க்கையையும் பாய்மரப் படகுப் போட்டியையும் மையமாகக் கொண்ட ‘மண்டாடி’ படத்தில் சூரியுடன் மகிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ், ரவீந்திர விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமார் ரூ.75 கோடி பட்ஜெட்டில் படம் உருவாக்கப்பட்டதாக முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது.
செப்டம்பர் 10-ம் தேதி வெளியான ‘மண்டாடி’ படத்துக்கு முதல் நாளில் ரூ 6 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூரியின் கரியரில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக மண்டாடி படம் அமைந்துள்ளது
இந்த சூழலில் சூரியின் அடுத்த படம் குறித்த தகவல் சினிமா வட்டாரங்களில் வெளியாகியுள்ளது. இன்று நேற்று நாளை , அயலான் ஆகிய படங்களை இயக்கிய ரவிகுமார் இயக்கும் படத்தில் சூரி நடிக்க இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு சென்னையில் எற்பட்ட பெருவெள்ளத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ரூ 50 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இத்திரைப்படத்தில் சூரி ரூ 25 கோடி சம்பளமாக பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல முன்னணி நடிகர்கள் இந்த படத்திற்காக கேட்ட சம்பளத்தைவிட இது பல மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.