சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் சரவனுக்கு 1,920 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்துள்ளது. இதேபோல், வெள்ளியின் விலையும் 5 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரம் குறித்து இப்போது பார்க்கலாம்.
தங்கத்தின் மீதான மதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சவரன் 1லட்சத்து 34 ஆயிரத்தை எட்டி நகைப்பிரியர்களை தலை சுற்ற வைத்தது. இதனையடுத்து ஒரு சவரன் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் 2 லட்சத்தை எட்டிவிடும் என பொருளாதார ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக அனைத்தும் தலைகீழாக மாறியது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கியதால், முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக வெள்ளியில் தங்களது முதலீட்டை அதிகரித்தனர். இதனால் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக குறைய தொடங்கியது.
தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று காலை தங்கத்தின் விலையானது அதிரடியாக குறைந்தது. அதன்படி, கிராம் ஒன்றுக்கு 240 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 14,015 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,920 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் 1,12,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதுது.
இந்த நிலையில், மாலையில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராம் ஒன்றிற்கு 140 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,155 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன், 1,13,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல், வெள்ளியின் விலையும் இன்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, காலையில் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 10 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், மாலையில் கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.