ப்ரிக்ஸ் மாநாட்டை நடத்தி முடித்த இந்தியா..! வன்மத்தை கக்கிய மேற்கத்திய ஊடகங்கள் - பயம் காரணமா?
குலசேகரன் முனிரத்தினம் September 15, 2026 11:44 AM

Brics Summit 2026: ப்ரிக்ஸ் அமைப்பை கண்டு மேற்கத்திய நாடுகள் கலக்கம் கொள்வதையே, அந்த பிராந்திய ஊடகங்களின் செயல்பாடுகள் காட்டுவதாக கூறப்படுகிறது.

வெற்றிகரமாக நடந்து முடிந்த ப்ரிக்ஸ் மாநாடு:

இந்தியா தலைமை தாங்கி நடத்திய ப்ரிக்ஸ் மாநாடு கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் போர் தொடர்பான ஆழமான கருத்து வேறுபாடு இருந்தாலும், மாநாட்டிற்கான இந்தியாவின் பிரகடனத்தை அனைத்து உறுப்பு நாட்டு தலைவர்களும் ஆமோதித்தனர். ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜிங் பிங் மற்றும் ஈரன பிரதமர் மசூத் பெஷெஷ்கியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற போதும், ப்ரிக்ஸ் கூட்டமைப்பை முற்றிலும் மேற்கத்திய எதிர்ப்புத் தளமாக மாறுவதிலிருந்து விலக்கி,உலகளாவிய தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் தனது அடிப்பை கருத்தில் பிரதமர் மோடி உறுதியாக இருந்தார். தொழில்நுட்பம் மற்றும் முக்கிய கனிமங்களை ஆயுதமாக்குவதற்கு எதிராக எச்சரித்த பிரதமர் மோடி, முக்கியமான உலகளாவிய பிரச்சினைகளைத் திறம்பட சுட்டிக்காட்டினார். தெற்கு நாடுகளின் ஒற்றுமையையும் வலியுறுத்தி பேசினார். 

ப்ரிக்ஸ் மாநாட்டில் சமரசங்கள்

அதேநேரம், பல்வேறு தரப்பினராலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான வலுவான நிலைப்பாடு என்பது இந்த மாநாட்டில் வெளிப்படுத்தப்படவில்லை. குறிப்பாக புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தவோ அல்லது அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை முற்றிலுமாக அகற்றவோ முயற்சிக்கவில்லை.  அமைப்பு பிளவுபடாமல் இருப்பதற்குத் தேவையான சமரசங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மாநாட்டின் பிரகடனம் அமெரிக்காவை வெளிப்படையாகக் குறிப்பிடுவதையோ அல்லது மத்திய கிழக்கில் நடந்த அமெரிக்காவின் தாக்குதல்களை நேரடியாகக் கண்டிப்பதையோ தவிர்க்கப்பட்டது.

வன்மத்தை கக்கிய மேற்கத்திய ஊடகங்கள்:

இந்நிலையில் ப்ரிக்ஸ் மாநாடு தொடர்பாக செய்தி வெளியிட்டபோது மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடனும், வன்மத்துடனும் புகைப்படங்களை பயன்படுத்தி இருப்பதை அறிய முடிகிறது. உச்சி மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தலைவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அந்த புகைப்படங்களை தவிர்த்து, இந்தியா ஏழ்மை நாடு என உணர்த்தும் விதமான புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  குறிப்பாக தி நியூயார்க் டைம்ஸ், அல்ஜஜீரா, ஃப்ரான்ஸ் 24, ஸ்பெக்ட்ராம் நியூஸ், தி கார்டியன் மற்றும் இன்டிபெண்டண்ட்ஆகிய அமெரிக்கா, ஃப்ரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஊடகங்களானது, ப்ரிக்ஸ் மாநாட்டிற்கான பேருந்து நிலைய மற்றும் சுவர் விளம்பரங்களுக்கு முன்பாக இந்தியர்கள் சைக்கிள் மற்றும் ஆட்டோவில் செல்வதை போன்ற புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளன. இவை முற்றிலும் இந்த அமைப்பின் மீதான எதிர்மறையான எண்ணம் மற்றும் தாங்களே மேலோங்கியவர்கள் என்பதை உணர்த்தும் விதமான செயல்பாடுகளாகவே உள்ளன.

இதையும் படியுங்கள்:Vijay Sethupathi: வாய்விட்ட விஜய் சேதுபதி..! வீடு கட்டி அடித்த தவெகவினர் - பிக்பாஸ் சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்

மேற்கத்திய நாடுகள் அஞ்சுவது ஏன்?

  • பிரிக்ஸ் அமைப்பானது உலகளாவிய பணம், வர்த்தகம் மற்றும் சர்வதேச விதிகள் மீதான மேற்கத்திய நாடுகளின் நீண்டகாலக் கட்டுப்பாட்டிற்குச் சவால் விடுப்பது அவற்றிற்கு கவலையை எழுப்பியுள்ளன.
  • இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் மேற்கத்திய நாடுகளுடன் போரை விரும்பவில்லை என்றாலும், அவற்றின் மீதான சார்பை குறைக்க விரும்புகின்றன.
  • ப்ரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலருக்குப் பதிலாக உள்ளூர் பணத்தைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்ய விரும்புகின்றன. பிற நாணயங்களைப் பயன்படுத்துவது, அமெரிக்காவின் நிதித் தண்டனைகளையும் வர்த்தகத் தடைகளையும் தவிர்க்க உதவுகிறது.
  • உலகப் பொருளாதார அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள அமெரிக்கா டாலரைச் சார்ந்துள்ளது. அதன் பயன்பாட்டை ப்ரிக்ஸ் நாடுகள் குறைப்பது அமெரிக்காவை பலவீனப்படுத்தும்
  • பல தசாப்தங்களாக, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற குழுக்கள் உலகளாவிய பணத்திற்கான விதிகளை வகுத்து வரும் நிலையில், ப்ரிக்ஸ் அமைப்பு தனது சொந்த நிதி கட்டமைப்பை உருவாக்கி, மேற்கத்திய நிறுவனங்களின் செல்வாக்கைக் குறைத்து, உலகத் தெற்கிற்கு ஒரு வலுவான குரலைக் கொடுக்க விரும்புகிறது. 

இதனை விரும்பாமலேயே ப்ரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை, பலவீனமாக காட்சிப்படுத்தும் வகையிலான புகைப்படங்களை மேற்கத்திய நாட்டு ஊடகங்கள் பயன்படுத்தியுள்ளன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.