தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக சைகை காட்டி விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு சட்டமன்றத்தில் திமுகவினர் கடும் எதிர்பு தெரிவித்த நிலையில், அப்போது பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரும், திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லையெனவும், மிசா காலத்தில் திருட்டு, பெண் வழக்குகளில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டதாகவும் கூறி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக சார்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொடர்பான சர்ச்சை கருத்தை பேசியிருந்தார்.
இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தது. இதனையடுத்து திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா வெளியிட்ட பதிவில், தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்; என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என அந்த பதிவில் ஆ.ராசா குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஆ.ராசா மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக நிர்வாகி கார்த்திக் என்பவர் கொடுத்த புகாரின் பேரின் வழக்கு பதியப்பட்டுள்ளது. திட்டமிட்டு அவமதிக்கும் வகையிலான செயல்,ஆபாசமான வார்த்தைகள்,பொது அமைதி குந்தகம் விளைவித்தல், பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையிலான வார்த்தை ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் விஜய்யை விமர்சித்தாக கூறி முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்கண்டேயன்,
எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆ.ராசா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆ.ராசாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.