“எங்கள் ராணுவ தளங்கள் மீதான தாக்குதலில் சீனாவிற்கு பங்கு“; அமெரிக்கா குற்றச்சாட்டு; சீனா பதிலடி
ஸ்ரீராம் ஆராவமுதன் September 12, 2026 10:14 PM

கடந்த ஜூலை மாதம் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கும், சீனாவுக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சீன முகமைகள் வழங்கிய உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள், மூன்று அமெரிக்க வீரர்களைக் கொன்ற அந்தத் தாக்குதலை நடத்துவதற்கு ஈரானுக்கு உதவியதாக அவர்கள் கூறுவதாக, நேற்று வெளியான வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் சிறப்பு அறிக்கை தெரிவிக்கிறது.

அறிக்கை கூறுவது என்ன.?

அந்த அறிக்கையின்படி, இந்த சம்பவம் குறித்து அறிந்த அமெரிக்க அதிகாரிகள், சீன முகமைகளிடமிருந்து ஜோர்டானிய தளத்தின் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களை டெஹ்ரான் பெற்றதாக கூறியுள்ளனர். போரின் போது, ஈரானுக்கு சீனா அளித்த ஆதரவே, அமெரிக்க வீரர்களின் உயிரைப் பறித்தது என்பதற்கு இதுவே மிகத் தெளிவான சான்று என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த படங்களை அந்த தாக்குதலுடன் அமெரிக்கா தொடர்புபடுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிகாரிகள் கூறியது என்ன.?

இந்த சம்பவம் குறித்து அறிந்த அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, கொடூரமான தாக்குதலின் இலக்கான முவஃபாக் சலாட்டி விமானப்படைத் தளத்தின் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களை டெஹ்ரான் பெற்றுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டது. இருப்பினும், இந்த படங்களை ஈரானுக்கு வழங்கிய சீன அமைப்புகளின் பெயர்களை அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிடவில்லை.

குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த சீனா

மேலும், இதில் பெய்ஜிங்கிற்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் நேரடியாக குற்றம் சாட்டவில்லை. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின்படி, தாக்குதலுக்கு முன்னும் பின்னும் ஈரான் இந்த படங்களை பெற்றுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகளை சீனாவிடம் கொண்டு சென்றபோது, ​​சீனா அவற்றை அடியோடு மறுத்து, ஆதாரம் கோரியது.

முன்னதாக மே மாதம், ஈரானுக்கு இதுபோன்ற செயற்கைக்கோள் படங்களை வழங்கியதாக குற்றம் சாட்டி, மூன்று சீன நிறுவனங்கள் மீது வாஷிங்டன் பொருளாதாரத் தடைகளை விதித்தது. கடந்த ஜூலை மாதம், ஜோர்டானில் அமெரிக்கப் படைகள் உறங்கிக் கொண்டிருந்த ஒரு குடியிருப்புப் பகுதியை ஈரான் ஏவுகணைகள் தாக்கியதில், மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதோடு, நான்கு பேர் காயமடைந்தனர். 24 மணி நேரத்திற்குள் அந்தத் தளத்தின் மீது நடத்தப்பட்ட மூன்று ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். மேலும், ஏப்ரல் மாத போர் நிறுத்தத்திற்குப் பிறகு, அமெரிக்க ராணுவத்தினருக்கு உயிரிழப்பை ஏற்படுத்திய முதல் தாக்குதலும் இதுவே ஆகும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.