தமிழ்நாட்டிற்கு முதலலீடுகளை ஈர்க்கும் விதமாக, முதலமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே, லண்டனில் இன்று நடைபெறும் நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயம் ஒன்றை முதல்வர் விஜய் துவக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக அங்கு சென்ற அவர், அஜித்தை பார்த்ததும் ஓடிச்சென்று கட்டித்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்குடன், 6 நாள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 10-ம் தேதி இரவு எமிரேட்ஸ் விமானத்தில் புறப்பட்டு, துபாய் வழியாக லண்டன் சென்ற முதல்வர் விஜய், நேற்று காலை லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தார். அப்போது, விமான நிலையத்தில் காத்திருந்த பிரிட்டன் தமிழ் சங்க தலைவர், தவெக துரை கண்ணன் மற்றும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள், முதலமைச்சருக்கு பூங்கொத்துகள் கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
அங்கு, புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுமே விஜய்யின் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கமாகும். பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களை முதலமைச்சர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
தனது பிரிட்டன் பயணத்தின் முக்கிய நிகழ்ச்சியாக, புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத்திடல் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார். அவருடன் இந்தியாவை சேர்ந்த முன்னணி கார் பந்தய வீரர்களும் பங்கேற்கின்றனர். இந்த போட்டி. இந்திய நேரப்படி, இரவு 9.45 மணிக்கு தொடங்கி 11.45 மணிக்கு நிறைவடைகிறது.
கார் பந்தயத்தை துவக்கி வைப்பதற்காக, சில்வர்ஸ்டோன் சர்க்கியூட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், அஜித்தை சந்தித்ததும், உற்சாகமாக ஓடிச்சென்று அவரை கட்டித்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தி, பந்தயத்தில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, அங்குள்ள லண்டன் வாழ் தமிழர்கள், அவருடன் செல்பி எடுத்து ஆட்டோகிராப் பெற்றனர். தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார் ஒன்றாக இணைந்து, ஆர்ப்பரித்த ரசிகர்களை நோக்கி கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினர்.