மத்திய அரசின் 2025-26 ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலை குறித்து மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஒவ்வொரு மாநிலத்தின் வரி வருவாய்க்கு ஏற்றவாறு நீதியான முறையில் வரி ஒதுக்கப்படும். ஆனால் தற்போது அப்படி நடத்தப்படவில்லை. இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஒதுக்கப்பட்டிருப்பது நன்றாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் ஓடும் ரயில்கள் தான் இந்தியாவிலேயே அதிக லாபத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது. பீகார் மக்கள் மீது காட்டக்கூடிய கருணையை நாங்கள் குறை சொல்லவில்லை.
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் மீது ஏன் இந்த பாரபட்சம். பிகாருக்கு ஆப்பிளை தட்டில் வைத்து கொடுத்ததை நாங்கள் குறை கூறவில்லை. ஆனால் தமிழ்நாட்டுக்கு குறைந்தது ஒரு நெல்லிக்கனி அளவாவது திட்டங்களை தந்து இருக்கலாம். மத்திய அரசுக்கு ஆதரவாக இருப்பவர்கள் தற்போது என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவில் 35 கோடி மக்களுக்கு அடிப்படை மருந்து மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு வெறும் 98 ஆயிரத்து 311 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று நாட்டின் முதல்நிலை உற்பத்தி களமாக இருக்கும் விவசாயத் துறைக்கு 1, 71, 457 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 விழுக்காடு என உயர்த்திருப்பது எல்ஐசி போன்ற நிறுவனங்களின் தனித்தன்மையை பாதிக்கலாம். அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில், பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு சாமானிய மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து வரும் நிலையில், இந்த பட்ஜெட்டை ஒரு சார்பானதாகவும், திருப்தி அற்ற வகையிலும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.