வரும் பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், இதனை முன்னிட்டு பக்தர்களின் தேவை மற்றும் வசதிகளின் அடிப்படையில் கோவையிலிருந்து திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சிறப்பு ரயில் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு மற்றும் அறிவிப்பு வெளியாகவில்லை. இதனையடுத்து முதல் நாளான நேற்று பயணிகள் இன்றி ரயில் காலியாகவே இயக்கப்பட்டது. இது குறித்து சேலம் கோட்டம் ரயில்வே கோயம்புத்தூர் - திண்டுக்கல் இடையே இந்த பயணிகள் ரயில் முன்பதிவில்லா ரயிலாக இயக்கப்படும்.
இந்த மெமு விரைவு சிறப்பு ரயில் கோயம்புத்தூரில் இருந்து (பிப்ரவரி 5) நேற்று முதல் பிப்ரவரி 14 வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 09.35 மணிக்கு கோவையில் புறப்பட்டு அதே நாள் பிற்பகல் 1.10 மணிக்கு திண்டுக்கல் சென்று அடையும். மறுமார்க்கமாக திண்டுக்கல் - கோயம்புத்தூர் முன்பதிவில்லா மெமு விரைவு சிறப்பு ரயில் திண்டுக்கல்லில் இருந்து (பிப்ரவரி 5) நேற்று முதல் பிப்ரவரி 14 வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) பிற்பகல் 2.00 மணிக்குப் புறப்பட்டு அதே நாள் மாலை 5.50 மணிக்கு கோயம்புத்தூர் வந்து அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். நேற்று காலை முதல் இந்த ரயில் இயக்கப்பட்டு வந்தாலும், மக்களுக்கு இந்த ரயில் சேவை குறித்த தகவல்களோ, விழிப்புணர்வோ இல்லாததால் பக்தர்கள் யாருமின்றி காலியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.