விழுப்புரம் மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் ஆதிகேசவன், வாசுகி(61) என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தங்கதுரை என்ற மகன் இருக்கிறார். இவர்கள் 3 பேரும் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இந்நிலையில் இவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த 75 பேர் கடந்த 2021ம் ஆண்டு முதல் ஏலச்சீட்டில் சேர்ந்து மாதந்தோறும் 10,000 வீதம் கடந்த 2024ம் ஆண்டு வரை 33 மாதங்கள் பணம் செலுத்தியுள்ளனர்.
இதையடுத்து சீட்டு முடிந்த நிலையில், தள்ளு பணத்தை தவிர மீதமுள்ள தொகையான 51 லட்சத்து 35 ஆயிரத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் வாசுகியிடம் பலமுறை சென்று பணத்தை கேட்டும் அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வாசுகியை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் தங்கத்துரை, ஆதிகேசவன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.