காதல் திருமணம் செய்த பின்னர், வேலைக்காக கணவன் தன்னை விட்டு விட்டு வெளிநாடு புறப்பட்டு சென்றதால் புதுப்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெற்றோரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதலியார்சாவடி சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் மீனவர் முருகன். இவருடைய இளைய மகள் 23 வயது முத்தரசி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த 30 வயதான லட்சுமணணை என்பவரை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் திருமணத்திற்கு லட்சுமணன் வீட்டில் சம்மதிக்கவில்லை. இதனையடுத்து கடந்த 4 மாதத்திற்கு முன்பு தர்மபுரியில் உள்ள லட்சுமணனின் குலதெய்வ கோவிலில் முத்தரசியை அவர் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி இருவரும் சுனாமி குடியிருப்பில் முத்தரசியின் பெற்றோருடன் வசித்து வந்தனர். இந்நிலையில் லட்சுமணனுக்கு, குவைத் நாட்டில் வேலை பார்ப்பதற்காக அழைப்பு வந்ததாக தெரிகிறது. இதனால் லட்சுமணன் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். மேலும் இதற்காக பாஸ்போர்ட், விசா எடுத்த அவர் குவைத் நாட்டில் வேலை செய்ய போகும் கம்பெனியின் கிளை அலுவலகம் உள்ள மும்பைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக காதல் கணவரை பிரிந்து இருந்த முத்தரசி, அவரை அவ்வப்போது தொடர்பு கொண்டு வெளிநாடு செல்ல வேண்டாம் என கூறிவந்தார். முத்தரசியின் பெற்றோர் அவரை சமாதானம் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை தந்தை முருகனுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு மாடி பகுதியில் உள்ள கீற்று கொட்டகைக்கு சென்ற முத்தரசி நீண்ட நேரம் ஆகியும் கீழே இறங்கி வரவேயில்லை.
பின்னர் மாடியில் சென்று பார்த்தபோது அங்கு முத்தரசி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் முத்தரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மும்பையில் உள்ள முத்தரசியின் கணவர் லட்சுமணனும் ஊர் திரும்பி வருகிறார். கணவர் வெளிநாடு செல்வது பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.