தலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள அலிப்பூர் பகுதியில் நேற்று காலை 15 வயதுடைய சிறுவன் ஒருவர் தனது சகோதரனின் உதவியுடன் காரை ஓட்டி வந்துள்ளார். அந்தச் சிறுவன் முகமெல்பூரில் பிர்னி சாலையில் காரை ஓட்டி வரும்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விளையாடிய 18 மாத குழந்தையின் மீது மோதியுள்ளது. உடனடியாக குழந்தையின் மாமா பிரதீப் குமார் அருகில் உள்ள SRHC மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றார். ஆனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் சோதனை செய்த போது சிறுவன் ஓட்டி வந்த கார் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த சிறுவனையும் மற்றும் வாகனத்தின் உரிமையாளர், அவரது சகோதரர் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் அப்பகுதியில் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, சிறார் ஓட்டுநர் மற்றும் அவருக்கு காரை அணுக அனுமதித்த அவரது சகோதர் ஆகியோர் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் சிறார் வாகனம் ஓட்டுதல், பொறுப்பற்ற நடத்தை மற்றும் வாகன விதிகளை மீறுதல், பெற்றோர் கண்காணிப்பின்மை ஆகியவை குறித்து காவல் துறையினர் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.