கனம்ழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதன் காரணமாக 12 மாவட்டங்களில் தயாராக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் லேசான மூடு பனி நிலவி வருகிறது. இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஒரு சில இடங்களில் மார்ச் 3ம் தேதி வரை பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 2ம் தேதி வரை கடலோர மாவட்டங்கள், தென்தமிழக மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று பிப்ரவரி 28ம் தேதி தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மார்ச் 1ம் தேதி சனிக்கிழமை கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், தென்மாவட்டம், டெல்டா மாவட்டங்களில் மார்ச் 1 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் 12 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சாய் குமார் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நெல் கொள்முதல் நிலையங்களில் இருக்கும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். அதற்கான உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மாவட்டத்தின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கனமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.