நாமக்கல்லில் சரக்கு அடிக்க பணம் தராததால், ஆத்திரம் அடைந்து, தந்தையை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள நத்தமேட்டை சேர்ந்தவர் காராள கவுண்டர் (85), விவசாயி. இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், தனது மகன் முருகேசன் (53), மருமகள் சசிகலா மற்றும் 2 பேரக்குழந்தைகளுடன் அவர் வசித்து வந்தார். இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான முருகேசனை, குடும்பத்தினர் தர்மபுரியில் உள்ள குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். 3 மாதம் சிகிச்சை முடித்து, கடந்த, ஜனவரி யில் ஊர் திரும்பினார். ஆனாலும், குடியை விட முடியாமல், மீண்டும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை 6 மணிக்கு, முருகேசன் தனது தந்தையிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசன், கீழே கடந்த மரக்கட்டையை எடுத்து தந்தை காராள கவுண்டரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து, உயிருக்கு போராடிய அவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காராளக்கவுண்டர் உயிரிழந்தார். தகவல் அறிந்த நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், மோகனூர் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக, மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.