பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு மற்றும் இதர நிதி உதவிகளை உயர்த்தி தமிழக அரக உத்தரவிட்டுள்ளது. இதனை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அத்துடன், இதனை செயல்படுத்தும் விதமாக விதிகளை திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நல நிதியத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு மற்றும் இதர நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், தற்போது பால் உற்பத்தியாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஈமச்சடங்கு உதவித் தொகை 5 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேப்போல, விபத்தில் ஊனமுற்ற பால் உற்பத்தியாளர் ஓர் உறுப்பை இழந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 75 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விபத்தில் இரண்டு உறுப்பை இழந்தால் 1.75 லட்சத்தில் இருந்து 2.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதனை செயல்படுத்த பால் ஊற்றும் உறுப்பினர்களிடம் இருந்த மாதத்திற்கு பெறப்பட்ட ஒரு ரூபாய் சந்தா தற்போது 10 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், சங்கம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் இருந்து மாதத்திற்கு பெறப்படும் சந்தா 50 பைசாவில் இருந்து ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.