அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மகன் விஜய் விகாஷ் – தீக்ஷனா தம்பதிக்கு கடந்த மார்ச் 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. வேலுமணி பா.ஜ.க-வுடன் நெருக்கமாக இருப்பதால்தான் எடப்பாடி திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியானது. மறுபக்கம் இந்த திருமண நிகழ்வில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி, மகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி திருமண வரவேற்பில் கலந்துகொள்வார் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று கொடிசியா வளாகத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர், வினோஜ் செல்வம் கலந்து கொண்டனர்.
சந்தித்துக்கொள்ளாத செங்கோட்டையன் - எடப்பாடிஅண்மை காலமாக எடப்பாடிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் மனகசப்பு நிலவி வருவதை காண முடிகிறது. இதனால் இருவரும் பரஸ்பரம் நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்து வரும் நிலையில், இன்று இருவரும் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், செங்கோட்டையன் மாலை 3 மணியளவில் விழா நிகழ்விடத்துக்கு வந்து, மணமக்களை வாழ்த்திவிட்டு 4 மணி விமானத்தில் சென்னை கிளம்பிவிட்டார். எடப்பாடி பழனிசாமி மாலை 6 மணியளவில்தான் வந்தார். இதன்மூலம் எடப்பாடி - செங்கோட்டையன் இடையே தொடர்ந்து மனக்கசப்பு நீடிக்கிறது என்பதாகவே பார்க்கப்படுகிறது.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், பா.ஜ.க நிர்வாகிகள் சரத்குமார், ராதிகா, விஜயதாரணி, திரை பிரபலங்கள் சத்யராஜ், சிவக்குமார், ரஞ்சித் (பிக்பாஸ்), கஸ்தூரி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ம.க கெளரவ தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK