'திருவிழா நடத்துவதற்கு எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது' என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த ஜமீன் இளம்பிள்ளை என்னும் பகுதியில் உள்ள மகாமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை நடத்துவது தொடர்பாக பாரத் என்பவர் சென்னை உயர் நீதிமண்டத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு மீதான விசாரணை நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது குறிப்பிட்ட சாதியினர், தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருவதால், அறநிலையத்துறை தரப்பில் அமைதிப் பேச்சுவார்த்த நடத்தப்பட்டது. அந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. ஆதலால், அறநிலையத்துறையே விழாவை நடத்தும் என முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன், ஆண்டுதோறும் அமைதிப் பேச்சு நடத்தப்பட்டு திருவிழா நடத்தப்படுவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பரத சக்கரவர்த்தி, 'சாதி என்பது மதமல்ல' என ஏற்கனவே உயர்நீதிமன்றம் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டி, திருவிழாவில் பங்கேற்க ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிமை உள்ளது. அதை மற்ற பிரிவினர் தடுக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் நீதிபதி மேலும் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் அமைதிப் பேச்சு நடத்த வேண்டிய அவசியமில்லை, அறநிலையத் துறை அதிகாரிகள் திருவிழாவை நடத்த வேண்டும். கடவுள் முன் எந்த பாகுபாடும் இருக்க கூடாது. எந்த பிரிவினருக்கும் முன்னுரிமை வழங்காமல் திருவிழாவை நடத்த வேண்டும். தங்கள் தலைமையில் தான் திருவிழா நடத்தப்பட வேண்டும் எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது' என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.