பெரியார் குறித்து விமர்சிக்கும் விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்."தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் புகைப்படத்தை அனைத்து அறைகளிலும், மாலை போட்டு மாட்டி வைத்துள்ளீர்கள். அவரை திராவிட இயக்கத்தின் அடையாளம் என்று போற்றுகிறீர்கள்" என்று பேசியிருந்தார்.
இதற்கு பல்வேறு திராவிர இயக்க கட்சியினரும் தங்கள் எதிர்ப்பை கூறியிருந்தனர். இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் அவர்களுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?
முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!?
குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
ஒன்றிய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே... இது போதாதா அவரைத் தமிழ்நாடு ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு?! பெரியார் போற்றுதும்! பெரியார் சிந்தனை போற்றுதும்!" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.