ஆன்லைன் விளையாட்டால் விபரீதம்; 17 வயது சிறுவன், 14 வயது சிறுமி தற்கொலை..!
Seithipunal Tamil March 13, 2025 04:48 PM

மதுரையில் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வமாக இருந்த 17 வயது சிறுவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதன் மன வருத்தத்தில்  சிறுவன் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

மதுரை காமராஜர் புரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன்    பிளஸ் 1 படிப்பை முடித்து விட்டு, பள்ளிக்கு செல்லாமல் ஓராண்டாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். வீட்டில் சிறுவன் எப்போதும்  அலைபேசியில் பப்ஜி, ப்ரீ பயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி வந்துள்ளார். இதனால், பெற்றோர் அவனை கண்டித்துள்ளனர்.

பெற்றோர் பேச்சி கேட்காத சிறுவன் மொபைலில் தொடர்ந்து விளையாடியுள்ளார். ஒரு கட்டத்தில் பள்ளி செல்லாத சிறுவனை  வேலைக்காவது செல்லுமாறு பெற்றோர் கூறியுள்ளனர். அதற்கு அவன் ''17 வயது என்பதால் என்னை யாரும் வேலைக்கு சேர்க்க மாட்டார்கள்'' என்று கூறியுள்ளான். தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டில் 'டாஸ்க்கை' முடிக்க முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆள்ளாகியுள்ளான்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாடியில் இருந்த போது பக்கத்து வீட்டு சிறுவன் வந்துள்ளான். அப்போது இந்த சிறுவன் அவனிடம், 'என் அப்பா, அம்மாவை பார்த்துக்கொள்' என்று கூறி அலைபேசியை கீழே போட்டு உடைத்து விட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்ததாக மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா முருகனேரி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் மொபைலை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பில் டி. கல்லுப்பட்டி எஸ்.ஐ வீரபத்திரன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.