ஹைதராபாத் மெஹிதீபட்னம் – ஆசிப் நகர் பகுதியில் உள்ள முக்தாபா அபார்ட்மென்டில், 4 வயது சிறுவன் லிப்டில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. அந்த குடியிருப்பில் பாதுகாப்பு பணியில் இருந்த ஷாம் பஹதூரின் மகன் சுரேந்தர், நேற்று இரவு 10 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தபோது லிப்ட் கதவிற்கு இடையில் சிக்கிக் கொண்டார். சுமார் 10 நிமிடங்கள் கழித்து தேடி வந்த பெற்றோர் மகன் லிப்ட் கதவில் சிக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக மகனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தங்கள் ஒரே மகனை இழந்த துயரத்தில், நேபாளத்திலிருந்து வேலைக்காக வந்த பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் மற்ற குடியிருப்பு வாசிகளிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிப்ட்களில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கும்படி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.