கர்நாடக மாநிலத்தில் உள்ள பாவக்கடா- தும்கூர் வழித்தடத்தில் கர்நாடக நகர பேருந்து ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சம்பவ நாள் அன்று அந்தப் பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் பாக்கு மற்றும் சுண்ணாம்பு வாயில் போட்டு மென்று பேருந்தின் உள்ளே துப்பியுள்ளார். இதனை கவனித்த பேருந்து நடத்துனர் அதை சுத்தம் செய்யுமாறு அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதனால் பேருந்தில் அந்தப் பெண்ணிற்கும், நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்த வாக்குவாதம் இறுதியில் அடிதடியாக மாறி அந்தப் பெண்ணுடன் வந்த உறவினர்கள் சேர்ந்து நடத்துனரை பேருந்தில் இருந்து வெளியே இழுத்து அடித்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நடத்துனர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் பாவக்கடா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்தப் பெண் உட்பட அவருடன் வந்த உறவினர்கள் 4 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தை அந்த பேருந்தில் பயணம் செய்த மற்றொரு நபர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவிற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் அரசு ஊழியர்களிடம் தவறாக நடந்து கொள்வதை கண்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பி உள்ளனர். மேலும் பொது இடங்களில் தவறுதலாக நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.