கூகுள் 'குரோம் பிரவுசர்' பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பு குறைபாடு; எச்சரிக்கை விடுத்துள்ள CERT-IN குழு..!
Seithipunal Tamil March 16, 2025 04:48 PM

 'குரோம்' எனப்படும் கூகுள் பிரவுசரின் பழைய பதிப்பை இணையத்தில் தேடுவதற்காக பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், 'சி.இ.ஆர்.டி., இன்' எனப்படும் இந்திய கணினி அவசரகால நடவடிக்கை குழு செயல்படுகிறது.

இந்த குழு சைபர் அச்சுறுத்தல்களான ஹேக்கிங் எனப்படும் கணினியை முடக்குவது, தரவுகளை திருடுவது போன்றவற்றை கண்காணித்து தடுத்து வருகிறது. இது குறித்து 'சி.இ.ஆர்.டி - இன்' குழு அறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கணினியில் விண்டோஸ் உள்ளிட்ட இயங்குதளங்களில் கூகுள் குரோம் பிரவுசரின் தற்போதைய பதிப்புக்கு முந்தைய பதிப்புகளில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது.

அத்துடன், இதை பயன்படுத்தி ஹேக்கர்களால் கணினியில் உள்ள உங்கள் தகவல்களை திருட முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், இதை தடுக்க, கணினியில் தற்போதைய பதிப்பு குரோம் பிரவுசரை நிறுவ வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.