தமிழக பாஜக சார்பில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக போராட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி இன்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட பாஜகவினர் முடிவு செய்திருந்த நிலையில் தற்போது வீட்டு காவலில் அவர்களை கைது செய்து வருகிறார்கள். அதாவது போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் வினோஜ் பி செல்வம், தமிழிசை சௌந்தர்ராஜன் உட்பட பாஜக மூத்த தலைவர்கள் பலரை வீட்டுக்காவலில் கைது செய்துள்ளனர்.
அதன்பிறகு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் நோக்கி வரும் பாஜகவினரை தொடர்ந்து போலீசார் கைது செய்து வருகிறார்கள்.மேலும் பாஜகவினர் ஒன்றாக திரண்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக்காவலில் வைத்தே போலீசார் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட நினைப்பவர்களையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கு தற்போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனடம் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், திமுக அரசின் ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழலை கண்டித்து தமிழக பாஜக சார்பில் இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தோம். இந்த போராட்டத்தை நினைத்து தொடை நடுங்கி திமுக அரசு மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளை போராட்டத்தில் பங்கேற்க கூடாது என வீட்டு சிறையில் வைத்திருக்கிறது.
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசை போட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களை கொண்டு கீழ் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்கு பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாக போராட்டம் அறிவித்து முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால் தானே உங்களால் இது போன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது. மேலும் தேதியே அறிவிக்காமல் திடீரென்று ஒரு நாள் நாங்கள் போராட்டத்தை நடத்தினால் உங்களால் என்ன செய்ய முடியும் என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.