தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம், முல்லை நகர் பகுதியில் வசித்து வருபவர் முருகானந்தம். இவர் விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மகனும், மகளும் இருக்கின்றனர். தற்போது முருகானந்தத்தின் மகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன .
`
இந்நிலையில் நிச்சயதார்த்த விழாவுக்கு பணம் ஏற்பாடு செய்ய இயலாமல் முருகானந்தம் திணறிவந்தார். மகளின் நிச்சய விழாவை நடத்தி பார்க்க பணம் இல்லையே என மருகினார். செய்வதறியாமல் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். வயலில் வாயில் நுரைதள்ளியபடி கிடந்த முருகானந்தத்தை மீட்ட குடும்பத்தினர், சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முதலுதவிக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதன் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.