கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பெற்றோர் கண்டித்ததால் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்து உள்ள மழுவத்தேரி கிராமத்தில் வசித்து வருபவர் பாலமுருகன்(45)- வாசுகி(36) தம்பதியர்கள். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகள் கீர்த்திகா (14) அருகே உள்ள மேலணிக்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அடிக்கடி படிக்காமல் செல்போன் பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று தனது செல்போனை பார்த்து கொண்டிருந்தபோது அவரது அம்மா வாசுகி செல்போனை பிடிங்கி கண்டித்துள்ளார். இதனையடுத்து அம்மா வாசுகி அருகே நடக்கும் வாரச்சந்தைக்கு சென்றுள்ளார். சந்தைக்கு சென்று வீடு திரும்பிய போது மகள் கீர்த்திகா தனது வீட்டில் உள்ள உத்திரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்து கொண்டதை பார்த்து அலரிதுடித்தார்.
இதனையடுத்து அருகே உள்ளவர்கள் கீர்த்திகாவை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து உறவினர்கள் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் , காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 9 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.